மதுரை கள்ளழகர் விழாவில் அலட்சியம் காட்டிய அதிகாரிகளை நீக்குக: பொன். ராதாகிருஷ்ணன்
மதுரை: மதுரை கள்ளழகர் விழாவில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மதுரையில் பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றி மக்களுக்கு பல்வேறுவித சந்தேகங்கள் உள்ளது. எந்த வாக்குச்சாவடியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு பதிவாகியுள்ளது என்பதே தெரியாமல் இருக்க, ஓட்டு எண்ணிக்கையில் புதிய முறையை பின்பற்றப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது பற்றி அறிந்து கொள்ள அலுவலர்களைப் போல, கட்சிகளின் ஏஜென்ட்களுக்கும் விளக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களின் உடல்களை மீட்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டியது. மத்திய, மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லையெனில் பாஜக சார்பில் மே மாதம் கடல் முற்றுகை போராட்டம் நடைபெறும். தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு இலங்கை அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் மீதான போரில் இலங்கை அரசுக்கு சாதகமாக மத்திய, மாநில அரசுகள் நடந்து கொண்டதாக ஐ.நா. விசாரணைக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.
இனப்படுகொலையை சகிக்க முடியாமல், சங்கரன்கோவிலைச் சேர்ந்த பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார். இனி வரும் காலத்தில் இது போன்று யாரும் செய்யக்கூடாது.
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது சுவாமிக்கு உடுத்த வேண்டிய பச்சைப் பட்டு அணிவிக்காமல், உடலில் சாற்றியிருந்த துணிகள் பழையவையாக இருந்தன.
கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், சுவாமிக்கு புத்தாடை உடுத்தாதது கண்டிக்கத்தக்கது.
சுவாமி பல்லக்கை முறையாக தூக்குவதற்கு கூட ஆள் வைக்கவில்லை. இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications