கோவை குழந்தைகள் கொலை வழக்கு-மே 23 முதல் விசாரணை
கோவை: கோவை பள்ளி குழந்தைகள் முஸ்கின், ரித்திக் படுகொலை வழக்கில் சாட்சி விசாரணை வரும் மே மாதம் 23ம் தேதி முதல் நடக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி கோவையில் ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித்தின் மகள் முஸ்கின் (11), மகன் ரித்திக் (8) ஆகியோர் கடத்தப்பட்டு கால்வாயில் தள்ளி கொல்லப்பட்டனர்.
பிரேதப் பரிசோதனையில் முஸ்கின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக கால் டாக்சி டிரைவர் மோகன்ராஜ், மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு அழைத்து செல்கையில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கூட்டாளி மனோகரன் மீதான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மனோகரனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனோகரன் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன் வரும் மே மாதம் 23-ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தி ஜூன் 14-ம் தேதிக்குள் வழக்கை முடிக்க ஏதுவாக சாட்சிகளை தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 121 நபர்களை 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications