Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாய்பாபா... ஆன்மீக உலகில் ஒரு மக்கள் சேவகர்!!

Subscribe to Oneindia Tamil

Sathya Sai Baba
சாய்பாபா-

உலகின் கோடிக்கணக்கான மக்களால் ஜீவமந்திரமாக உச்சரிக்கப்பட்ட பெயர். வெறும் ஆன்மீகவாதி என்றில்லாமல், ஒரு மக்கள் சேவகராக, மக்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றித் தரும் தனிமனித அரசாங்கமாக பார்க்கப்பட்டவர் சாய்பாபா.

உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, அறிவியல், கலை, ஆன்மீகம் என அனைத்தையும் மக்களுக்கு வழங்கியவர் சாய்பாபா. அதுவே அவர்மீதான பல சர்ச்சைகளைப் பின்னுக்குத் தள்ள வைத்தது என்றால் மிகையல்ல.

பாபா பிறந்தது ஒரு மிகச் சாதாரண குடும்பத்தில். 1926, நவம்பர் 23-ம் தேதி ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி எனும் மிகச் சிறிய வறண்ட கிராமத்தில் ஈசுவரம்மா - பெத்தவெங்கம ராஜு ரட்னாகரம் ஆகியோருக்கு 8 வது மகனாகப் பிறந்தார் பாபா. அவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ.

தனது 14வது வயதில் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து, கல்கண்டு போன்ற பொருட்களை வரவழைத்துக் காட்டினார். இதனால் கோபமான அவரது தந்தை, அவரைப் பிரம்பாலடித்து, 'யார் நீ' என்று கேட்க, ஸ்ரீஷிர்டி சாய்பாபாவின் மறுபிறப்பு நான் என்றார் பாபா.

அடுத்த சில தினங்களிலேயே தான் குடும்ப பந்தத்திலிருந்து விலகிவிட்டதாகவும், லௌகீக வாழ்க்கையைத் துறந்து ஆன்மீக, மக்கள் பணியில் ஈடுபடுவதாகவும் அறிவித்தார்.

சாய் பாபாவின் புகழ் பரவ ஆரம்பித்தது. இந்தியா மற்றும் உலகம் முழுக்க அவருக்கு பக்தர்கள் பெருக ஆரம்பித்தனர்.

தனது முதல் ஆன்மீக உரையை சாய்பாபா நிகழ்த்தியது தமிழகத் தலைநகரான சென்னையில்தான். அதுவும் தமிழில்! தொடர்ந்து தென்னிந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பிரசாந்தி நிலையம்

1948-ல் புட்டபர்த்தியில் ஒரு பெரிய வழிபாட்டுக் கூடத்தை நிறுவினார் சாய்பாபா. அதுதான் பிரசாந்தி நிலையம். இந்த பிரமாண்ட மையத்தைக் கட்டி முடிக்க இரண்டாண்டுகள் ஆனது. சாய்பாபா பக்தர்களுக்கான தலைமை மையமாகவும் அது திகழ்கிறது. இந்த பிரசாந்தி நிலையத்தைச் சுற்றிலும் பக்தர்கள் வசதிக்காக ஏராளமான கட்டடங்கள் படிப்படியாக உருவாகின. இவை அனைத்தும் பக்தர்களுக்கு இலவசமாக தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வளமான அனந்தபூர்..

ஆந்திராவின் சபிக்கப்பட்ட மாநிலம் என்றுதான் அனந்தபூரைச் சொல்வார்கள். அந்த அளவு வறண்ட பூமி அது. இந்த மாநிலத்தை உலகின் பிரசித்தி பெற்ற பகுதியாக மாற்றியவர் சாய்பாபா.

1954-ல் புட்டபர்த்தியில் ஒரு இலவச பொது மருத்துவமனையை நிறுவினார் அவர். இந்த மருத்துவமனைதான் பின்னர் ஸ்ரீ சத்ய சாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக விஸ்வரூபம் எடுத்தது.

பின்னர் அங்கு சாய்பாபா கல்வி அறக்கட்டளை மூலம் ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக் கழகத்தையும் நிறுவினார்.

1964-ல் அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது. நான்கு முறை தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் அதிலிருந்து பிழைத்து வந்த பாபா, தான் இறந்தாலும், மீண்டும் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பிரேம சாய்பாபாவாக மறுபிறப்பு எடுப்பேன் என்று அறிவித்தார்.

ஒரே வெளிநாட்டுப் பயணம்

சாய்பாபா மேற்கொண்ட முதல் மற்றும் ஒரே வெளிநாட்டுப் பயணம் உகாண்டாவுக்குப் போனதுதான். 1964-ல் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.

1968-ல் மும்பையில் சத்யம் என்ற மையத்தையும், 1973-ல் ஹைதராபாதில் சிவம் என்ற மையத்தையும், 1981-ல் சென்னையில் சுந்தரம் என்ற ஆன்மீக மையத்தையும் நிறுவினார். இவற்றின் மூலம் பல்வேறு கல்வி மற்றும் ஆன்மீகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1995-ல் வறண்ட மாநிலமான அனந்தபூரின் ராயலசீமா பகுதியின் தாகம் தணிக்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தைக் கொண்டுவந்தார் சாய்பாபா. படிப்படியாக மாவட்டம் முழுவதும் இதனை விரிவுபடுத்தினார். அரசாங்கம் கூட செய்ய முடியாத இந்த அரிய பணியை தனி மனிதராக செய்து முடித்தார் பாபா. 1.2 மில்லியன் மக்கள் இந்த திட்டத்தால் பலனடைந்து வருகின்றனர்.

1999-ல் மதுரையில் ஆனந்த நிலையம் மந்திரை ஏற்படுத்தினார். 2001-ல் பெங்களூரில் மேலும் ஒரு இலவச சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைத் திறந்தார்.

2005-ம் ஆண்டு பாபாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நடப்பது சிரமமானது. இதனால் வீல்சேரைப் பயன்படுத்த ஆரம்பித்தார் பாபா. 2006-ல் இரும்பு சேரில் நின்ற மாணவன் தவறி அவர் மீது விழுந்ததில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது.

2007-ல் சாய்பாபா தமிழகத்துக்கு வந்தார். முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கே போய் அவரைச் சந்தித்து அவருக்கும் குடும்பத்தினருக்கும் ஆசி வழங்கினார்.

கொடைக்கானலில் உள்ள சாய் ஸ்ருதி ஆசிரமத்துக்கும் எப்போதாவது சாய்பாபா வந்து செல்வார்.

136 நாடுகளில்...

சாய்பாபாவின் அறக்கட்டளை உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. உலகமெங்கும் 1200 மையங்கள் பிரசாந்தி நிலையத்துக்கு உள்ளன. 178 நாடுகளில் சாய் பாபாவின் பக்தர்கள் இருப்பதாக 2002-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இவரைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை மட்டும் 2002-ல் 60 லட்சமாக இருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை 1 கோடியைத் தொடுகிறது. இவரை வணங்குவோர் எண்ணிக்கையோ கோடிகளில். சாய்பாபா அறக்கட்டளைக்கு சொந்தமாக ரூ 45000 கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களில் இந்துக்கள் தவிர, முஸ்லிம், கிறிஸ்தவம் என பிறமதத்தவர்களும் நிறையப் பேர் உண்டு.

பாபாவின் பக்தர்கள் பட்டியலில் பல ஜனாதிபதிகள், பிரதமர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என சகலரும் அடங்குவர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் பாபா மீது தனி பற்று கொண்டிருந்தனர். அவரை நேரில் சந்தித்து ஆசியும் பெற்றனர்.

சேவையே மனிதனை உயர்த்தும்...

சாய்பாபாவின் ஆன்மீகத் தத்துவம் எளிமையானது. "கடவுள் ஒருவர்தான். அவர்தான் அனைத்து மதங்களின் காரணகர்த்தா. என்னிடம் வர மதம் தேவையில்லை. உங்கள் மதங்களிலேயே இருந்தபடி என்னைப் பின்பற்றுங்கள். மக்களுக்கு தொண்டு செய்யுங்கள். மரணத்துக்குப் பிறகும் உங்கள் சேவை, உங்கள் பெயரை உலகுக்கு உரத்துச்சொல்லும் என்பதை நம்புங்கள்," என்றார் பாபா.

உண்மைதான்!!

சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+