அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராவார்: பொன்.ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி: சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராவார் என்று பெரும்பாலானோர் கருதுவதாக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சட்டசபை தேர்தல், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து பாஜக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது,
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் நம் கட்சியில் கட்டுபாடு இல்லை. தேர்தலில் போட்டியிடவே பலர் தயாராக இல்லை.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஜெயலலிதா தான் முதல்வராவார் என்று பெரும்பாலானவர்கள்நினைக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலையாக உள்ளாட்சி மன்றங்களை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திடப் போவதாக ஜெயலலிதா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். அவர் சொன்னதை செய்யாமல் இருக்கமாட்டார். ஜெயலலிதா வரும் மே மாதம் 17-ம் தேதி பதவியேற்றதும், அந்த உத்தரவில் முதல் கையெழுத்திடலாம். அதனால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும் வாய்ப்பு ஏற்படலாம். எனவே, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்துங்கள். பாஜகவுக்கு பண பலம், அமைப்பு ரீதியான பலம் இல்லை.
நமக்கு மக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் மீடியா பலம் இல்லை. நம் கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும். அதற்கு நாம் நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நான் தலைவர் பதவியில் இருக்கும் வரை, அவர்களுக்கு எதிர்கால தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது. எல்லா ஊராட்சிகளிலும் நம் கட்சி பிரதிநிதித்துவம் பெற, வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications