ராஜபக்சேவுக்கு சர்வதேச கோர்ட்டில் தண்டனை பெற்றுத் தர வேண்டும்-வைகோ
சென்னைச சர்வதேச நீதிமன்றத்தில் கொடூரன் ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்று தர தமிழக மக்கள் ஒன்று திரள வேண்டும். இளைஞர்கள் போராட முன் வர வேண்டும். தமிழர்களுக்காக, தமிழர்களை கொன்று குவித்த கொடூரனுக்கு தண்டனை பெற்று தர கட்சி பாகுபாடின்றி போராட முன் வாருங்கள் என்று அழைக்கிறேன் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த சிங்கள சர்வாதிகாரி ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், எம்.நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில்,
ஐ.நா.சபையின் அறிவிப்பால் உலகத்தின் கண்கள் ஒளிப்பெற்றது போல் இருக்கிறது. தமிழகத்தின் உறக்கம் கலைகிறது. ஐ.நா.சபை மூலம் சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சேவை நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்காக எத்தனையோ பேர் தீக்குளித்து மரணத்தை தழுவியிருக்கிறார்கள். நாங்கள் தீக்குளிப்பை ஊக்குவிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். யாரும் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள். நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்களுக்காக போராட வாருங்கள். மக்கள் கூட்டத்தை திரட்டுங்கள்.
எங்களை பொறுத்தவரையில் எந்த அணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விடுதலைப்புலிகளை ஆதரித்து வருகிறோம். இனியும் ஆதரிப்போம். விடுதலைப்புலிகளை பற்றி பேச எந்த அரசியல் கட்சிக்கும் அருகதை கிடையாது. புலியை கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செய்யும்.
ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்காதவர்களை, விடுதலைப்புலிகள் பற்றி பேசாதவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.
சர்வதேச நீதிமன்றத்தில் கொடூரன் ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்று தர தமிழக மக்கள் ஒன்று திரள வேண்டும். இளைஞர்கள் போராட முன் வர வேண்டும். எங்கள் கட்சியில் சேர நான் அழைக்கவில்லை. தமிழர்களுக்காக, தமிழர்களை கொன்று குவித்த கொடூரனுக்கு தண்டனை பெற்று தர கட்சி பாகுபாடின்றி போராட முன் வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன் என்றார்.
பழ. நெடுமாறன் பேசுகையில்,
மே தினத்தில் தமிழர்களுக்கு எதிராக பேரணியை ராஜபக்சே அறிவித்து இருக்கிறார். ஐ.நா. சபை அறிவித்து இருக்கும் அறிவிப்பு நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், ராஜபக்சேயை தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க இந்திய அரசு உதவி செய்யும். இதை தடுக்க வேண்டும் என்றால் தமிழர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நம்முடைய உணர்வை தெரியப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், ஐ.நா.சபையின் அறிவிப்பு உலகத்தின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இதை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கொலை குற்றத்தில் இருந்து ராஜபக்சே தப்பி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது ராஜபக்சே போல வேடமணிந்து வந்த நபரை சிறையில் அடைத்திருப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. அவருக்கு தமிழர்கள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது போலவும் காட்டப்பட்டது.
மேலும் ராஜபக்சே உருவபொம்மைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடித்து உதைத்து தீவைத்துக் கொளுத்தினர். மேலும் ராஜபக்சே கொடும்பாவியை செருப்புகளால் தொடர்ந்து அடித்தபடி இருந்தனர்.