அரசுப் பேருந்தில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த போலீசுக்கு செருப்படி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த போலீஸ் அதிகாரிக்கு செருப்படி விழுந்தது.
கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி அரசுப்பேருந்து ஒன்று சென்றது. அதில் மூன்று கல்லூரி மாணவிகள் ஒரு இருக்கையில் அமர்ந்து சென்றனர்.அவர்களுக்கு பின்னால் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.
பேருந்து சென்று கொண்டிருக்கையில் அந்த நபர் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அந்த இருக்கையை விட்டு எழுந்து முன் பகுதிக்குச் சென்றனர். ஆனாலும், அந்த மாணவிகளை விடாமல் துரத்திய அந்த நபர் அங்கும் தனது சில்மிஷத்தை தொடர்ந்தார்.
இந்த நிலையில் பஸ் தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிய மூன்று மாணவிகளும் அந்த நபரை சுற்றி வளைத்து தாங்கள் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அடித்தனர்.
மாணவிகளிடம் நடந்த விவரத்தைக் கேட்டறிந்த பொதுமக்கள் தங்கள் பங்கிற்கு அவர்களும் அந்த நபரை நையப்புடைத்தனர்.
வலி தாங்க முடியாத அந்த நபர் தான் ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டே தர்மபுரி பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்தார்.
அங்கிருந்த போலீசார் மாணவிகளை மிரட்டி புகார் கொடுக்கவிடாமல் துரத்தியடித்தனர். இதனால் இந்த பிரச்சனையை அரசியல் கட்சிகள் கையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications