மின்வெட்டை எதிர்த்து போராட்டத்திற்கு தயாராகும் கோவை
கோவை: தொடரும் மின் தடையை கண்டித்து கோவையில் 38 தொழில் அமைப்புகளின் சார்பில், மே 5ம் தேதி மாபெரும் கண்டனப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது.
இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து திரளும் ஆதரவு பிரமிப்பூட்டுவதாக உள்ளது. தொழிற் சங்கங்கள், உற்பத்தியாளர்கள், சமூக அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கள், பொது மக்கள் என பலரும் தங்களது ஆதரவை தெரிவிப்பதால் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மின் தடைக்கு மட்டும் எதிரான போராட்டமாக இருக்காது என்கிறார்கள் அமைப்பாளர்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் முதல் கோரிக்கையே மின் தடையை எல்லோருக்கும் சமமாக பகிருங்கள் என்பதுதான். தமிழகத்தின் மொத்த தேவையான 12,000 மெகா வாட் மின்சாரத்தில் சென்னை மண்டலத்துக்கு மட்டுமே 3,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மொத்த தேவையில் இது 30 சதவீதம் ஆகும்.
மொத்த தமிழகமே தினமும் 3 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும்போது சென்னைக்கு மட்டும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த பாரபட்சத்தை கண்டித்து முதன் முதலில் குரல் எழுப்பியது கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் எனும் அமைப்பு. "சென்னை மட்டும்தான் தமிழகமா?! என்று கேட்டு கோர்ட் படியேறியது தமிழக மின் நுகர்வோர் சங்கம். பல்வேறு தரப்புகளிலும் இருந்து எழுந்த ஆட்சேபத்தினால் சென்னையில் ஒரு மணி நேரம் மின் தடை அமலுக்கு வந்தது.
தமிழகம் முழுவதும் சமச்சீர் மின் தடை, தலை நகரில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கும், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வாரி வழங்கப்படுவதை ரத்து செய்தல், மின் உற்பத்தியை அதிகப்படுத்துதல், ஜெனரேட்டர் உபயோகப்படுத்த டீசலுக்கு மானியம் ஆகியவை இந்தப் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications