மதுபான விளம்பரங்களில் நடிக்காதீங்க ப்ளீஸ்: டோணிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
சென்னை: மதுபான விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர் டோணியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் டோணிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வென்று தந்த உங்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய இளைஞர்களின் வழிகாட்டியாகவுள்ள நீங்கள் அவர்கள் மீது மதுப் பழக்கத்தை திணிக்காமல் இருக்க மறைமுக மதுபான விளம்பரங்களில் இருந்து விலகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மதுப்பழக்கத்தால் உலகில் 25 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறப்பதாக உலக நலவாழ்வு அமைப்பு தெரிவிக்கிறது. குடிப்பழக்கம் அதிகரித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அந்த அமைப்பின் “2011-ம் ஆண்டு மதுபானம் குறித்த உலக அறிக்கை" தெரிவிக்கிறது.
உயிர்க்கொல்லி நோய் எனப்படும் எய்ட்சை விட மிகப் பெரிய நோயாக குடிநோய் இருக்கிறது என்று உலக நலவாழ்வு அமைப்பு கூறுகிறது. உலகம் முழுவதும் நேரும் இறப்புகளில், 4 விழுக்காடு இறப்புகளுக்கு மதுபானமே காரணம். புற்றுநோய் இருதய நோய்,கல்லீரல் பாதிப்பு என சுமார் 60 வகையான கொடும் நோய்களுக்கு மதுபானம் காரணமாக இருக்கிறது.
குடிப்பழக்கத்தால் இளைஞர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக 15 வயது முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் அகால மரணம் அடைய குடியே முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த இளம் வயதினரில் ஆண்டுக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் குடியால் இறக்கின்றனர். குடிப்பழக்கத்தால் சாலை விபத்துகள், வன்முறை, சிறுவர்கள் பாதிப்பு, வேலை பாதிப்பு என பல கேடுகள் நேருகின்றன.
மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மறைமுகமாக சோடா, தண்ணீர், இசைத் தட்டு என இல்லாத பொருட்களின் பெயரில் மதுபான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இத்தகைய மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிக்க உங்களது முன்னோடி சச்சின் டெண்டுல்கர் மறுத்துவிட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. கடந்த 2010-ம் ஆண்டில், மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிக்க சச்சின் டெண்டுல்கருக்கு ஆண்டுக்கு ரூ. 20 கோடி கொடுக்க மதுபான நிறுவனங்கள் தயாராக இருந்தபோதும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
உங்களது வருந்தத்தக்க இச்செயலால் இப்போது இந்தியாவின் எல்லா பகுதியிலும்- உங்களது படத்துடன் மதுபான விளம்பரப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை இளைய தலைமுறையினரின் மீது குடிப்பழக்கத்தை திணிக்கின்றன. கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர் கால நலனை மனதில் வைத்து, நீங்கள் மதுபான நிறுவனங்களின் சதி வலையை அறுத்தெறிய வேண்டும். மறைமுக மதுபான விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் தற்போது நீங்கள் பங்குபெறும் மதுபான விளம்பரங்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications