பின்லேடன் மரணம்-பெருத்த அமைதி காக்கும் பாக். அரசு, மீடியா
டெல்லி: உலகையே நடுங்க வைத்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ஊடகங்களும் பெருத்த அமைதி காக்கின்றன.
பின்லேடனின் மரணம் குறித்த செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தவுடன் அமெரிக்காவில் பெருத்த கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. ஆனால் அதற்கு நேர் மாறாக பாகிஸ்தானில் பெருத்த அமைதி நிலவுகிறது. குறிப்பாக அரசுத் தரப்பும், ஊடகங்களும் இதுகுறித்து அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை.
பாகிஸ்தான் அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலோ, கருத்தோ வெளியாகவில்லை. பாகிஸ்தான் மீடியாக்களும் இந்த சம்பவம் குறித்து முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிடவில்லை.
பாகிஸ்தானின் புகழ் பெற்ற தி டான் செய்தித்தாளின் இணையம் செயல்படவே இல்லை. தொழில்நுட்பக் கோளாறு என்று அதற்கு காரணம் கூறியுள்ளது டான். அதேபோல தி நேஷன்.காம், தி டெய்லி டைம்ஸ் இணையதள்களும் கூட பின்லேடன் குறித்த செய்திகளை விரிவாகத் தரவில்லை.
பின்லேடன் குறித்த செய்தியை இவர்கள் நம்பவில்லையா அல்லது பாகிஸ்தானின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டதே என்ற தர்மசங்கடம் காரணமாக அமைதி காக்கிறார்களா என்பது புரியவில்லை.












Click it and Unblock the Notifications