அல்கொய்தாவில் சேர வேண்டாம்-பிள்ளைகளுக்கு உயிலில் கோரிக்கை வைத்த பின்லேடன்
வாஷிங்டன்: தனது பிள்ளைகளை அல் கொய்தா இயக்கத்தில் சேர வேண்டாம் என்றும், தனது மனைவிகள் மறுமணம் செய்யக் கூடாது என்றும் ஒசாமா பின்லேடன் தனது உயிலில் எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்லேடன் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி இந்த உயிலை எழுதி வைத்ததாக தெரிகிறது. மிகவும் ரகசியம் என எழுதப்பட்டு இந்த உயிலை அவர் பத்திரமாக பராமரித்து வந்தார்.
இந்த உயில் குறித்த விவரத்தை குவைத்தைச் சேர்ந்த செய்தித் தாளான அல் அன்பா வெளியிட்டுள்ளது. அதில், தனது குடும்பத்தினருடன் அதிகநேரத்தை செலவிட முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் பின்லேடன். மேலும் தான் மரணமடைந்தால், தனது மனைவிகள் மறுமணம் செய்யக் கூடாது என்றும் தனது பிள்ளைகளை அல் கொய்தா இயக்கத்தில் சேர வேண்டாம், எனது பாதையில் போக வேண்டாம் என்றும் பின்லேடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்திற்கு 3 மாதங்களுக்குப் பிறகு இந்த உயிலை எழுதியுள்ளார் பின்லேடன்.
நான்கு பக்கங்களைக் கொண்டதாக உள்ள அந்த உயில் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்டு அதில் உங்களது சகோதரன் அபு அப்துல்லா ஒசாமா முகம்மது பின்லேடன் என்று கையெழுத்திட்டுள்ளார் பின்லேடன்.
தன்னைச் சுற்றியிருப்பவர்களால் கூட தான் கொல்லப்படலாம் என்று கருதியே இந்த உயிலை பின்லேடன் எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த உயில் எங்கிருந்து கிடைத்தது என்பதை அல் அன்பா தெரிவிக்கவில்லை. மேலும் இது நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதையும் அது தெரிவிக்கவில்லை.
இதேபோன்ற ஒரு உயிலை கடந்த 2002ம் ஆண்டே, சவூதியைச் சேர்ந்த அல் மஜல்லா என்ற பத்திரிக்கையும் வெளியிட்டது. இருப்பினும் அது போலியானது என்று அப்போது அல் கொய்தா ஆதரவு இணையதளம் ஒன்று மறுத்து விட்டது.
பின்லேடனின் உயிலாக கருதப்படும் அதில் நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குல் சம்பவம் குறித்தும், 1983ம் ஆண்டு லெபனானில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடந்த தாக்குதல் குறித்தும், சோமாலியாவில் 19 அமெரிக்க கடற்படை வீரர்களைக் கொன்றது குறித்தும், நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் குறித்தும் பின்லேடன் விவரித்துள்ளார்.
இந்த உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் - தனது மனைவியல் மறுமணம் செய்யக் கூடாது. தனது குழந்தைகள் அல்கொய்தாவில் இணையக் கூடாது, ஜிஹாத் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்பதுதான்.
9வது நூற்றாண்டில் இருந்த முஸ்லீம் கலிபாவான ஒமர் பின் கத்தாப் தனது மகன் அப்துல்லாவுக்குக் கூறியதைப் போலவே தனது பிள்ளைகளுக்கும் கூறியுள்ளார் பின்லேடன்.
மேலும் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடியாமல் போனதற்காக தன்னை மன்னித்து விடுமாறும் அவர் தனது குழந்தைகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
"அபாயங்களும், கடினமான பயணங்களையும் கொண்ட பாதையை நான் தேர்ந்தெடுத்து விட்டேன். இதில் ஏமாற்றங்களும், துரோகங்களும் அதிகம். என் அருமை மகன்களே, உங்களுடன் அதிக நேரத்தை செலவிட முடியாமல் போய் விட்டது. ஜிஹாத்தில் நான் குதித்ததால் இந்த நிலை. இதற்காக என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறியுள்ளார் பின்லேடன்.












Click it and Unblock the Notifications