பின்லேடன் மறைவைக் கொண்டாடும் நிகழ்ச்சி-ஒபாமா அழைப்பை ஏற்க மறுத்த புஷ்
வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதை கொண்டாடும் வகையில், கிரவுண்ட் ஜீரோ எனப்படும் நியூயார்க் இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருமாறு அதிபர் ஒபாமா விடுத்த அழைப்பை ஏற்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மறுத்துவிட்டார்.
தன்னை அழைத்ததை அவர் பெரிதும் வரவேற்றார். ஆனால் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒதுங்கியே இருக்க விரும்புகிறார். அவர் தீவிரவாதத்திற்கு எதிரான இந்த வெற்றியை அமெரிக்கர்களுடன் சேர்ந்து கொண்டாடுவார் என்று புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் டேவிட் ஷெர்சர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா நியூயார்க்கில் உள்ள கிரவுண்ட் ஜீரோவில் பேசவிருக்கிறார். அப்போது கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அல் கொய்தா நடத்திய தாக்குதல்களில் இறந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்து பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஒபாமா அழைப்பு விடுத்ததை ஏற்க புஷ் மறுத்துவிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒபாமா புஷ்ஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின் லேடன் கொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார். இதையடுத்து ஒபாமா, அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத் துறையை பாராட்டி புஷ் அறிக்கை வெளியிட்டார்.
செப்டம்பர் 11 தாக்குதல் நடந்தவுடனே புஷ் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் ஒசாமாவைத் தேடும் பணியை முடுக்கி விட்டார். ஆனால் அவர் பதவிக்காலத்தில் பின் லேடனைப் பிடிக்க முடியவில்லை. இருப்பினும் பின்னால் வந்த ஒபாமா அதை செய்து விட்டார்.












Click it and Unblock the Notifications