'ஜெரோனிமோ எகியா'...பின்லேடன் ஆபரேசனுக்கு அமெரிக்கா வைத்த பெயர்!

பாகிஸ்தானின் அபோடாபாத் நகருக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெலிகாப்டர்களில் அமெரிக்க வீரர்கள் கிளம்பியது முதல், ஒசாமா சுட்டுக் கொல்லப்படுவது வரை அங்கு நடந்த அனைத்தையும், அமெரிக்க கமாண்டோக்களின் ஹெல்மட்களில் இருந்த கேமராக்கள், அப்படியே செயற்கைக் கோள் மூலம் லைவ் ஆக ஒளிபரப்பின.
வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அதிபர் பராக் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடேன், வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி மற்றும் ராணுவ, சிஐஏ தலைவர்கள் நேரில் கண்காணித்தனர்.
இந்த முழு ஆபரேசன் முடியும் வரை ஒபாமா ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்கிறார்கள்.
கமாண்டோக்கள் ஒசாமா தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்த 38வது நிமிடம், ஒரு வீரர் பின்லேடனை இடது கண்ணி்ல் சுட்டார். குண்டு ஒசாமாவின் தலையை சிதைத்த பின், அவருக்கு உயிர் இருக்கிறதா என்பதை சோதனையிட்டுவிட்டு, அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்த பின் சொன்னார்... 'Geronimo EKIA'. இதற்கு வந்த வேலை முடிந்துவிட்டது என்று பொருள்.
முன்னதாக கமாண்டோக்களில் 25 பேர் அந்த வீட்டுக்கள், இரவிலும் தெளிவாக பார்க்க உதவும் night-vision goggles உதவியோடு நுழைய, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஹெலிகாப்டர்களிலும், தரையிலும் சுமார் 100 வீரர்கள் வெளியில் இருந்தனர்.
இந்தத் தாக்குதலில் பின்லேடனின் மகன் காலித், லேடனின் இளைய மனைவி அமால் அல் சதா ஆகியோரும் பலியாயினர்.
லேடனைத் தேடி ஒவ்வொரு அறையாகச் சென்ற கமாண்டோக்கள், 3வது மாடியில் ஒரு அறையில் இருந்த பின்லேடனை சுற்றி வளைத்து சுட்டனர். அப்போது அவர் நிராயுதபாணியாகவே இருந்துள்ளார். அவரும் துப்பாக்கி ஏந்தி சண்டை போட்டதாக வந்த தகவல்கள் தவறு.
பின்லேடனை சுட்ட பின் வீட்டிலிருந்த கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க், டிவிடிக்கள் மற்றும் சில ஆவணங்களையும லேடனின் உடலையும் எடுத்துக் கொண்டு ஆப்கானி்ஸ்தான் வான் பகுதிக்குள் நுழைந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் வட அரபிக் கடலில் நின்றிருந்த யுஎஸ்எஸ் கார்ல் விஷன் விமானம் தாங்கிக் கப்பலை அடைந்துள்ளனர்.
இந் நிலையில் அத்துமீறிய அமெரிக்க ஹெலிகாப்டர்களை சுற்றி வளைக்க பாகிஸ்தானின் போர் விமானங்கள் வானில் பாய்ந்ததாகவும், அப்போது ஒபாமா பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை தொலைபேசியில் அழைத்து, 'சும்மா இருக்குமாறு' உத்தரவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் வான் பகுதியை விட்டு வெளியேறவுடன், சர்தாரியை மீண்டும் தொடர்பு கொண்ட ஒபாமா, பின்லேடன் கொல்லப்பட்ட விவரத்தை சொன்னார் என்கிறார்கள்.
அது என்ன 'ஜெரோனிமோ எகியா'?:
அமெரிக்காவின் 'ரெட் இன்டியன்ஸ்' இனத்தின் (Native Americans) மிக முக்கியமான போராளித் தலைவர் தான் ஜெரோனிமோ. அரிசோனாவில் தங்களது பழங்குடி இனப் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்த மெக்சிகோ மற்றும் அப்போதைய வெள்ளையின அமெரிக்கர்களுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தியவர் தான் ஜெரோனிமோ.
அமெரிக்கப் படையினர் இவரது பெயரைச் சொல்லிவிட்டே பெரும் தாக்குதல்களை நடத்துவது வழக்கம். அமெரிக்க பாராசூட் வீரர்கள், விமானத்திலிருந்து குதிக்கும்போது சொல்லும் பெயரும் ஜெரோனிமோ தான்.
இதில் EKIA என்பது 'Enemy Killed In Action'!












Click it and Unblock the Notifications