தமிழகத்தில் இடைத் தேர்தல் வரும்..வைகோ விஸ்வரூபம் எடுப்பார்-நாஞ்சில் சம்பத்
கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. தமிழகம் மீண்டும் தேர்தலை சந்திக்கும் என்று மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
மதிமுகவின் 18வது ஆண்டு விழாவையொட்டி கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் பேசிய அவர், அட்சய திருதியை நாளில் கட்சியின் 18வது ஆண்டு துவங்குவது நம்பிக்கை அளிக்கிறது. 18 ஆண்டுகளைக் கடந்த மதிமுகவின் கடின உழைப்புக்கு இதுவரை பலன் இல்லை.
ஆனாலும் எதிர்பார்ப்புகள் இல்லாததால், தாய்- மகன் உறவு போல் வைகோ- தொண்டர்கள் உறவு தொடர்கிறது. மே 13க்குப் பின் ஒரு நல்ல நிலைமைக்கு வரவுள்ளோம். கட்சியை கரை சேர்க்க நினைத்தோம். கண்ட கனவில் கல் விழுந்தது; நிராகரிக்கப்பட்டோம்.
நாம் உடைந்து போனது உண்மை தான். தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்ததால், இனி எட்ட முடியாத உயரத்தை எட்டுவோம்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க நினைத்தோம். அப்படி செய்தால் அது யாரோ ஒருவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதால், அதைச் செய்யவில்லை.
காங்கிரஸ் போட்டியிட்ட 63 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட நினைத்தோம். அதில் மும்முனை போட்டி ஏற்பட்டு, காங்கிரஸ், வெற்றி பெற வாய்ப்பு உருவாகி விடும் என்பதால் கைவிட்டோம்.
தேர்தலில் வைகோ மெளனம் சாதித்தார். சத்தங்களை விட மெளனம் பலமானது என்பதை நிரூபித்தோம். வைகோவின் மெளனம், வருங்கால தமிழகத்தை நம்மிடம் ஒப்படைக்கும்.
நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. தமிழகம் மீண்டும் தேர்தலை சந்திக்கும். அப்போது, வைகோ விஸ்வரூபம் எடுப்பார்.
மூன்றாயிரம் அமெரிக்கர்களைக் கொன்ற ஒசாமா பின்லாடனை அமெரிக்கா அழித்தது. மூன்று லட்சம் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேவை அமெரிக்கா கொல்லுமா? என்றார் சம்பத்.
மதிமுக வருங்காலத்தில் மாபெரும் சக்தியாகும்-வைகோ:
வரும் காலத்தில் மதிமுக மாபெரும் சக்தியாக உருவாகும் என்று கட்சியின் 18ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியின் தலைமையகமான தாயகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இயக்கமாக மதிமுக திகழும். மக்கள் நலனை குறிக்கோளாக கொண்டு மதிமுக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என சபதம் ஏற்போம். வரும் காலத்தில் மதிமுக மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்.
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்து ஈவு இறக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். சொல்லொனா துயரத்தில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக தமிழ் ஈழம் மலரும் என்றார்.












Click it and Unblock the Notifications