புழல் சிறையில் பிளஸ்டூ தேர்வு எழுதிய அத்தனை பேரும் பாஸ்
சென்னை: புழல் மத்திய சிறையில் பிளஸ்டூ தேர்வு எழுதிய 23 கைதிகளும் பாஸ் செய்துள்ளனர். அதிலும் சத்யன் என்ற ஆயுள் தண்டனைக் கைதி 901 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 4 பெண்களும், 19 ஆண்களும் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 2 பேர் தலா வேலூர், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். திருச்சியைச் சேர்ந்தவர்கள் 4 பேர். இவர்கள் அனைவரும் ஆண்கள். இவர்கள் போக 4 பெண் கைதிகளும் தேர்வு எழுதியிருந்தனர். சிறை வளாகத்திலேயே இவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.
இவர்கள் அனைவருமே தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினர்.
இந்தக் கைதிகளுக்கு பாடம் நடத்துவதற்காக சிறை அதிகாரிகள் சண்முக சுந்தரம், ஜெயராமன் தலைமையில் ஒரு குழு அமைத்து பாடம் சொல்லித் தரப்பட்டது. அதை கவனமாக படித்து இந்தக் கைதிகள் தற்போது பாஸ் செய்து சிறை அதிகாரிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளனர். மேலும் இந்தக் கைதிகளுக்குப் பாடம் நடத்தியவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளே. இவர்கள் போக வெளியிலிருந்தும் தமிழ் பாடத்திற்காக ஒரு ஆசிரியரை வரவழைத்து பாடம் சொல்லிக் கொடுத்துள்ளனர்.
கைதிகளிலேயே அதிக மதிப்பெண் பெற்றவர் சத்யன் என்பவர். இவர் ஒரு ஆயுள் தண்டனைக் கைதி. இவர் 1200க்கு 901 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர் மேல் படிப்பு படிக்க விரும்புகிறார். இவருக்கான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications