பி.இ., எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்: திருச்சி, மதுரை, கோவையிலும் நடத்த வைகோ கோரிக்கை
மதுரை: தமிழக அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்போது நடப்பதுபோன்று சென்னையில் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோவையிலும் நடத்த வேண்டும் என்று மதிமுக செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள அனைத்து மாணவ-மாணவியருக்கும் மதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் அதையே நினைத்து கவலைப்பட்டு எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றி வாழ்வில் முன்னேற வேண்டும். அவ்வாறு செய்து பெற்றோருக்கும், பொன்னாட்டிற்கும் பெருமை தேடித் தர வேண்டும்.
தமிழக அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர், உறவினர்களுடன் சென்னைக்கு வருகின்றனர். இதனால் கால விரயம், பண விரயம், வீண் அலைச்சல் ஏற்படுகின்றது.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலக்கட்டத்தில் சென்னையில் மட்டுமே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றில்லை.
மாணவர்களும், பெற்றோர்களும் படும் அவஸ்தைகளைத் தவிர்க்க தொழில்நுட்பக் கல்வி மற்றும் மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை தவிர்தது திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications