சிறுவாணி அணையில் 15 நாட்களுக்கு மட்டுமே குடிநீர்: கோவை மக்கள் கவலை
கோவை: சிறுவாணி அணைக்கட்டுப் பகுதிகளில் மழை பெய்யாததால் கையிருப்பு நீரின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போதைய இருப்பின்படி இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும்.
சிறுவாணி அணை:
மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அணையில் அதனைச் சுற்றி 30 கிலோமீட்டர் தூரம் வரையிலான பகுதிகளில் பெய்யும் மழை நீர் வந்து சேர்கிறது. கோவை நகரத்தின் மிக முக்கியமான நீர் ஆதாரம் சிறுவாணி அணை தான். இந்த அணையிலிருந்து குழாய் மூலம் வரும் தண்ணீரே கோவையின் தாகம் தீர்த்து வருகிறது.
வறட்சி:
சிறுவாணி அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இருந்தபோது நாள் ஒன்றுக்கு 9 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டது. தற்போது அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. போதிய அளவில் மழை இல்லை. மேலும் கொளுத்தும் வெயிலில் பெருமளவு நீர் ஆவியாவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. எனவே அணையிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவை வெகுவாக குறைக்க அதிகாரிகள் முடிவு செய்தார்கள். அதன்படி நாளொன்றுக்கு 8.6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. ஆனாலும், அணையில் நீர் இருப்பு அதிவேகமாக குறைந்து வருவதால் தற்போது 7 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் எடுக்கப்படுகிறது.
விநியோகத்தில் மாற்றம்:
தொடர்ந்து வரும் தட்டுப்பாடினை நீக்க இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்ட பகுதிகளில் இனி நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் என்று அறிவித்தது மாநகராட்சி. தற்போது அணையின் நீர்மட்டம் 866 மீட்டராக இருக்கிறது. தினமும் 7 கோடி லிட்டர் என்றளவில் எடுக்கப்பட்டால் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே கொளுத்தும் கோடை வெயிலில் தவிக்கும் கோவை மக்களுக்கு மேலும் தவிப்பை ஏற்படுத்தப் போகிறது தண்ணீர் பஞ்சம்.












Click it and Unblock the Notifications