சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத அமைதிப் புரட்சி: பழ. நெடுமாறன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வகையில் அமைதிப் புரட்சி நடந்துள்ளது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக மக்கள் நடத்தியுள்ள இந்த அமைதிப் புரட்சியை நான் பாராட்டுகிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர், திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் பலர் படுதோல்வி அடைந்துள்ளனர்.
ஈழத் தமிழருக்கு திமுக-காங். செய்த துரோகம், தமிழக மீனவர்களை காக்கத் தவறியது, இந்தியாவின் மெகா ஊழலான 2ஜி ஊழல், ஆட்டிப் படைத்த குடும்ப ஆட்சி ஆகியவற்றுக்கெல்லாம் மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர்.
பண பலம், அதிகார பலம் மற்றும் வாரி இறைத்த இலவசங்களைக் கண்டு மக்கள் மயங்கிவிடவில்லை. மாறாக திமுக கூட்டணியின் முறைகேடுகளை முறியடித்துள்ளனர்.
திருமங்கலம் சூத்திரத்தை மறுபடியும் செயல்படுத்தவிடாமல் தடுத்து தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது.
மத, சாதி, பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்தத் தமிழகமே ஒன்றாக இணைந்து திமுக கூட்டணிக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று பாராட்டுகிறேன்.
புதிய அரசு அமைக்கவிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைக் கீழ்கண்ட நடவடிக்கைகளை தலையாய கடமையாகக் கருதி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஐ.நா. குழுவால் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த, இலங்கையில் மீதமுள்ள தமிழர்களை பாதுகாக்க ஐ.நா. படையை அங்கு அனுப்பி வைக்க, தமிழக மீனவர்களை காக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications