பெரும் வெற்றி பெற்றும் அமைச்சர் பதவி நழுவியதால் சோமசுந்தரம் ஏமாற்றம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் உலகரட்சகனை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியும் கூட முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போய் விட்டது. இதனால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார்.
கடந்த 2001ல் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார் சோமசுந்தரம். அப்போது அவர் வெற்றி பெற்றது, மாநிலத்தில் அடுத்த ஆட்சி யாருடையது என்பதை நிர்ணயிக்கும் களமான உத்திரமேரூரில். அப்போது அவருக்கு கைத்தறித் துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா.
ஆனால் அந்தப் பதவியை பயன்படுத்தி காஞ்சிபுரம் மாவட்ட நெசவாளர்களுக்கு எதுவுமே செய்யாமல் விட்டு விட்டார் சோமசுந்தரம். இதனால் அவருக்கு தொகுதியில் பெயர் கெட்டது. இதை வைத்தே அடுத்து வந்த 2006 தேர்தலில் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். இதனால் சோமசுந்தரம் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
இந்த நிலையில், தற்போதைய தேர்தலில் அவருக்கு மீண்டும் சீட் கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால் இந்த முறை அவர் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். வென்றால் அமைச்சர் பதவி நிச்சயம் என்று சோமசுந்தரம் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் பணியாற்றினர்.
சோமசுந்தரமும் தீவிரப் பிரசாரம் செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவின் உலகரட்சகனும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். இறுதியில் சோமசுந்தரம் கிட்டத்தட்ட 25,000 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இதையடுத்து அமைச்சர் பதவி குறித்து சோமசுந்தரமும், அவரது ஆதரவாளர்களும் ஆர்வத்தோடு காத்திருந்தனர். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நெசவாளர்கள் மத்தியில் சோமசுந்தரத்தின் மீதான அதிருப்தி இன்னும் குறையாமல் இருப்பதால்தான் அவருக்கு அமைச்சர் பதவியை ஜெயலலிதா தரவில்லை என்று கூறப்படுகிறது.