நெல்லை, தூத்துக்குடியிலிருந்து சட்டசபைக்கு செல்லும் 9 புதுமுகங்கள்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 16 தொகுதிகளில் இருந்து சட்டசபைக்கு செல்பவர்களில் 9 பேர் புதுமுகங்கள். முன்னாள் அமைச்சர்கள் இருவர் 4வது முறையாக சட்டசபைக்கு செல்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இதில் நெல்லையில் 9 சட்டசபை தொகுதியிலும், தூத்துக்குடியில் 5 சட்டசபை தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. இரண்டு மாவட்டங்களிலும் தலா ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வென்றுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நான்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற நாராயணன், அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தென்காசியில் வென்ற சரத்குமார், கடையநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்ற செந்தூர் பாண்டியன், வாசுதேவநல்லூர் தொகுதியில் வென்ற டாக்டர் துரையப்பா, ராதாபுரம் தொகுதியில் வென்ற மைக்கல் ராயப்பன் ஆகியோர் முதல் முறையாக சட்டசபைக்கு செல்கின்றனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் வென்ற செல்லபாண்டியன், கோவில்பட்டியில் வென்ற கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் தொகுதியில் வென்ற மார்க்கண்டேயன் ஆகியோரும் முதல் முறையாக சட்டசபைக்கு செல்கின்றனர். திருச்செந்தூரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சங்கரன்கோவில் முன்னாள் அமைச்சர் கருப்பசாமி ஆகிய இருவரும் நான்காவது முறையாக தொடர்ந்து வென்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டனர். அனிதா ராதாகிருஷ்ணன் 2001, 2006 சட்டசபை தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டபோதிலும் வெற்றி பெறவில்லை. தற்போது 2-வது முறையாக வென்றுள்ளார்.
நெல்லையில் வென்ற நயினார் நாகேந்திரன், ஸ்ரீவைகுண்டத்தில் வென்ற எஸ்பி சண்முகநாதன், ஆலங்குளத்தில் வென்ற பிசி ராஜேந்திரன் ஆகிய மூவரும் 2வது முறையாக சட்டசபைக்கு செல்கின்றனர். 2001-ல் இதே தொகுதியில் வென்ற மூவரும் 2006-ல் தொகுதியை பறிகொடுத்தனர். தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
குமரியில் இருந்து 4 புதுமுகங்கள் தேர்வு
குமரி மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் புதுமுகங்கள்.
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து அதிமுக சார்பி்ல் பச்சைமால் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே குளச்சல் தொகுதியி்ல் இருந்து தமிழக சட்டசபைக்கு ஒரு முறை தேர்வு செய்யப்பட்டார். கிள்ளியூர் தொகுதியில் இருந்து ஜான் ஜேக்கப் 2-வது முறையாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரை தவிர நான்கு எம்.எல்.ஏ.க்களும் தமிழக சட்டசபைக்கு செல்லும் புதுமுகங்கள் ஆவர். நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் (அதி்முக), குளச்சல் தொகுதி பிரின்ஸ் (காங்), பத்மநாபுரம் தொகுதி புஷ்பலீலா ஆல்பன் (திமுக) விளவங்கோடு விஜயதாரணி (காங்) ஆகியோரும் இந்த புதுமுகங்கள் பட்டியலில் உள்ளனர்.