காய்கறி மண்டிகளால் வாகன நெரிசல்-தவிக்கும் ஊட்டி சுற்றுலாப் பயணிகள்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - ஊட்டி மெயின் ரோட்டில் தான் இந்தியாவின் மிகப்பெரிய காய்கறி மண்டி சந்தைகளின் ஒன்று இருக்கிறது.காய்கறி மணிடிகளால் மேட்டுப்பாளையம் - ஊட்டி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. கோடை விடுமுறையில் குடும்பத்துடன் பொழுது போக்க வாகனங்களில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், சாலையில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். இது நேற்றல்ல இன்றல்ல பல ஆண்டுகளாக மக்கள் அனுபவிக்கின்றனர். இத்தொல்லைக்கு தீர்வு காண, அதிகாரிகளுக்கு அக்கறையில்லை என்று புலம்புகின்றனர் மக்கள்.
வாகன நெரிசல்:
மேட்டுப்பாளையத்தில் 250க்கும் மேற்பட்ட காய்கறி கமிஷன் மண்டிகள் உள்ளன. நீலகிரி, ஆந்திரா, கர்நாடகம், டில்லி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து லாரிகளில் இங்கிலீஸ் காய்கறிகள், உருளைக்கிழங்கு ஆகியவை மண்டிகளில் இறக்கப்பட்டு ஏலம் விடப்பட்ட பிறகு பிற பகுதிகளுக்கு சப்ளை யாகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 300 லாரிகள் காய்கறிகளை இறக்கி, ஏற்ற நகருக்குள் வந்து செல்கின்றன. ஊட்டி மெயின் ரோட்டில் மாரியம்மன் கோவில் முதல் பவானி ஆற்றுப்பாலம் வரை மட்டுமே 20க்கும் அதிகமான காய்கறி கமிஷன் மண்டிகள் உள்ளன. ரோட்டிலேயே லாரிகளை தாறு, மாறாக நிறுத்தி காய்கறி மூட்டைகளை இறக்கி ஏற்றுகின்றனர். இதன்காரணமாக தினமும் மதியம் 3.00 முதல் இரவு 8.00 மணி வரை, ஊட்டி மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிவது சகஜமாகிவிட்டது. நெரிசலால் சுற்றுலா மற்றும் பஸ் பயணிகள் சிக்கி பரிதவிக்கின்றனர். இதனால், குறித்த நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்கும், கோவையிலுள்ள விமான நிலையத்துக்கும் செல்ல முடியாமல் பலரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். குறிப்பாக, காந்தி மைதானம் அருகே அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை சரி செய்யவும் போதிய எண்ணிக்கையில் போலீசாரும் நிறுத்தப் படுவதில்லை. ஒரு முறை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்தால், நிலைமை சீராவதற்கு 30 நிமிடத்துக்கும் மேலாகிறததாம்.
புதர்காடாக மாறியிருக்கு புதிய காய்கறி மண்டிச் சந்தை
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், காய்கறி மண்டிகளை அன்னூர் ரோட்டில், ஜடையம்பாளையம் ஊராட்சி பகுதிக்கு மாற்ற கமிஷன் மண்டி உரிமையாளர் சங்கத்தினர் 10 ஏக்கர் நிலம் வாங்கி, உறுப்பினர்களுக்கு தனித்தனியாக பிரித்து கொடுத்தனர். எனினும்,வர்த்தக ரீதியிலான பல்வேறு சிரமங்களை காரணமாக கூறி யாரும் புதிய இடத்துக்கு மண்டியை மாற்ற மறுத்து வருகின்றனர். புதிய மண்டிகள் அமைப்பதற்காக நிலம் வாங்கப்பட்டு சமன் செய்யப்பட்ட இடத்தில் பராமரிக்காமல் தற்போது மரம், செடி, கொடிகள் முளைத்து புதர்காடாகவே மாறிவிட்டது.
இடமாற்றம் அவசியம்:
காய்கறி மண்டிகளை இடமாற்றினால் மட்டுமே, மேட்டுப்பாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்பது போலீஸ், வருவாய், போக்குவரத்து துறையினரருக்கு தெரிந்தது தான். அவ்வாறிருந்தும், பல ஆண்டாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிவருவது ஏன் என்ற மர்மம் மக்களுக்கு புரியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து, காய்கறி மண்டி உரிமையாளர்கள் கூறுகையில், "மண்டி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் வாங்கிய இடம் உறுப்பினர்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டது. உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை. இதனால், சங்க உறுப்பினர்கள் மட்டும் மாற்று இடத்துக்கு மாறுவதால், நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்பட்டுவிடாது. "அனைத்து மண்டிகளையும் ஒட்டுமொத்தமாக இடமாற்றினால் மட்டுமே தீர்வு ஏற்படும். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் கூறுகையில்,""ஊட்டி மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வாகனங்கள் சீராக செல்ல ஏதுவாக பஸ் ஸ்டாண்ட் அருகேயும், காந்தி மைதானம் முன்பும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ""ரோட்டில் லாரிகளை நிறுத்தி காய்கறி மூட்டைகளை இறக்காமல் தடுக்க, கடைகள் முன் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மெயின் ரோட்டில் தொடரும் நெரிசலுக்கு கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் தீர்வு காணவேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications