வெற்றி தந்த கொளத்தூர் வாக்காளர்களுக்கு முக ஸ்டாலின் நன்றி!
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தனக்கு வெற்றியைத் தந்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கு மு.க.ஸ்டாலின், நேற்று திறந்த ஜீப்பில் நின்றபடி வீதி, வீதியாகச் சென்று நன்றி கூறினார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரும் போட்டிக்கிடையே வெற்றி பெற்றார். வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று கொளத்தூர் தொகுதி மக்களுக்கு அவர் நன்றி கூறினார்.
திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி மு.க.ஸ்டாலின் பொதுமக்களைப் பார்த்து கைகூப்பி நன்றி தெரிவித்தபடி சென்றார். அவருடன், மனைவி துர்கா ஸ்டாலின், தி.மு.க. வடசென்னை மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு, மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட தி.மு.க. தொண்டர்கள் சென்றனர்.
தொண்டர்கள் வரவேற்பு:
மாலை 5 மணிக்கு திறந்த ஜீப்பில் நின்றபடி புறப்பட்ட மு.க.ஸ்டாலின், இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். ஒவ்வொரு பகுதியாக மு.க.ஸ்டாலின் சென்றபோது, அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ஜவஹர் நகர் பகுதியில் மு.க.ஸ்டாலின் வந்தபோது, அவரை முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் வரவேற்று அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
இன்றும், நாளையும் தொடரும்....
மு.க.ஸ்டாலின், இன்றும் (புதன்கிழமை) கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். இதற்காக, இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு வரை நன்றி தெரிவிக்கிறார்.
நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கொளத்தூர், அண்ணாசிலை அருகே அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி அறிவிப்பு பிரசாரத்தை தொடங்குகிறார்.