டூப்பானது டூம்ஸ்டே கணிப்புகள்... உலகம் 'அப்படியே' உள்ளது!!

உலகின் எந்தப் பகுதியிலும் மாலை 6 மணிக்கும் அதற்குப் பிறகும் கூட ஒன்றும் நடக்கவில்லை.
டூம்ஸ்டே எனும் பெயரில் இன்று 6 மணியோடு உலகம் அழிந்துவிடும் என்று சொன்னவர் அமெரிக்காவின் ஹரால்ட் கேம்பிங் என்ற கிறிஸ்தவ மதத் தலைவர். இவர் ரேடியோ நிலையத்தில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருபவர்.
இவரது பேச்சு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
89 வயதாகும் கேம்பிங், ஏற்கனவே இதுபோன்ற கணிப்புகளைக் கூறியவர்தான். 1994ம் ஆண்டில் உலகம் அழியும் என்று இவர் கூறியிருந்தார். ஆனால் அது புஸ்வாணமாகிப் போனது. ஆனால் தற்போது மே 21ம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு உலகம் அழிவது உறுதி என்று அவர் கூறினார்.
தான் பணியாற்றும் ரேடியோ நிலையத்தில் நேற்று பணி முடிந்து கிளம்பியபோது அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் கை குலுக்கிய கேம்பிங், இதுதான் நாம் சந்திக்கும் கடைசி சந்திப்பு என்று கூறிய அவர், நாளை மாலையுடன் உலகம் அழியப் போவதால் நாம் மீண்டும் சந்திக்க மாட்டோம். நானும் இருக்க மாட்டேன் என்று கூறி விட்டுக் கிளம்பினார்.
எப்படி உலகம் அழியும் என்று உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேம்பிங்கிடம் கேட்டபோது, நியூசிலாந்தில் மிகப் பயங்கரமான பூகம்பங்கள் 21ம் தேதி மாலை 6 மணிக்கு ஏற்படும். இதனால் மிகப் பெரிய பேரழிவுகள் ஏற்படும். இந்த பூகம்பங்கள் நியூசிலாந்தோடு நின்று விடாது. அப்படியே ஒவ்வொரு பிராந்தியமாக நகரும். கடைசியில், உலகத்தின் பெரும்பாலான மக்கள் அழிந்து போய் விடுவார்கள். 2 அல்லது 3 சதவீத மக்கள்தான் உயிர் பிழைப்பார்கள். அவர்களையும் கூட கடவுள் தன்னுடன் அழைத்துக் கொண்டு விடுவார்.
எனது கணிப்பு மிகச் சரியானது, துல்லியமானது. நோவாவுக்கு கடவுள் 7 நாள் அவகாசம் கொடுத்தார். மாபெரும் வெள்ள அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த கால அவகாசத்தை அவர் கொடுத்தார். ஆனால் நமக்கு கடவுள் 7000 ஆண்டு காலத்தை அவகாசமாக கொடுத்தார். அந்த காலம் யூத காலண்டர்படி மே 21ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது என்பார் கேம்பிங்.
ஒன்றும் ஆகவில்லை...
ஆனால் மாலை 6 மணியைத் தாண்டிய பிறகும் உலகம் அழியவில்லை. நியூஸிலாந்து மட்டுமல்ல, வேறு எந்தப் பகுதியிலும் சிறு பூகம்பம் கூட நேரவில்லை. 1994-ம் ஆண்டு மட்டுமல்ல, இந்த ஆண்டும் பொய்யாய்ப் போனது கேம்பிங் கணிப்பு.
இனி 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதிக்கு காத்திருக்கிறார்கள் இதுபோன்ற அழிவுச் செய்திகளில் ஆர்வம் கொண்டோர். அது என்ன 21, டிசம்பர் 2012?
அன்றுதான் உலகின் கடைசி தினமாம். அன்றோடு உலகம் அழிந்துவிடுமாம்! இது மாயா இன மக்களின் பழைய கல்வெட்டுப்படி சொல்லப்படும் கணிப்பாம்.
உலகின் ஆயுளை அவ்வப்போது கேள்விக்குறியாக்குபவர்கள்தான் கடைசியில் காணாமல் போயிருக்கிறார்கள். நம்பிக்கையோடு வாழ்க்கையைத் தொடருவோருக்கே இந்த உலகம் இடம் தருகிறது!!












Click it and Unblock the Notifications