ஜூன் 12-க்குள் வேட்பாளர்கள் செலவு கணக்கை சமர்பிக்க பிரவீன் குமார் உத்தரவு
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வரும் ஜூன் மாதம் 12-ம் தேதிக்குகள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை சமர்பிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 2 ஆயிரத்து 748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 141 பெண் வேட்பாளர்களும் அடக்கம். ஒவ்வொருவரும் ரூ. 16 லட்சம் வரை தேர்தலுக்காக செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வேட்பாளர்கள் செலவு செய்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிக்க 5 தொகுதிகளுக்கு ஒரு செலவு பார்வையாளர் நியமிக்கப்பட்டிருந்தனர். வேட்பாளர்களின் செலவு கணக்கை ஒப்பிட்டுப் பார்க்க தேர்தல் ஆணையமும் நிழல் கணக்கை பராமரித்து வந்தது.
வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் செலவு கணக்குடன் தேர்தல் ஆணையத்தின் நிழல் கணக்கை ஒப்பிட்டு பார்ப்போம். இவற்றுக்கு இடையே அதிக வேறுபாடு இருப்பின், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்புவோம். அந்த வேட்பாளரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லையெனில் அவரை 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தேர்தல் முடிவு வெளியான தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் செலவு கணக்கை அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை வேட்பாளர்கள் அனைவரும் வரும் ஜூன் மாதம் 12-ம் தேதிகிக்குள் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவுக் கணக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்காக ஜூன் மாதம் 12-ம் தேதி 58 செலவு பார்வையாளர்கள் வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications