அதிகாரிகளின் நடவடிக்கைகளில் அரசு தலையீடு இருக்காது: அமைச்சர் வேலுமணி
கோவை: போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைகளில் அரசின் தலையீடு இருக்காது என்றும், அவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஆய்வுக் கூட்டம்
நேற்று கோவை வந்த தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் தலைமையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
அரசு தலையிடாது
அப்போது பேசிய அமைச்சர், போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைகளில் அரசின் தலையீடு இருக்காது. எனவே, அவர்கள் சுதந்திரமாக பணியாற்றி குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கோவையில் அனுமதியற்ற கட்டிடங்கள் மீது மாநகராட்சி காட்டும் கெடுபிடிகள் குறித்து ஆணையர் மீது ஏராளமான புகார்கள் வருகின்றன. ஆனால் சட்டத்தை மீறும் எந்தச் செயலையும் அனுமதிக்க முடியாது என்பது தான் தமிழக முதல்வரின் விருப்பம். எனவே, அனுமதியற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் வீடுகள் கட்டும்போது சிறிய தவறுகள், விதிமீறல்கள் இருப்பது தவிர்க்க இயலாது. அதனால் மக்களைப் பாதிக்கும் வகையில் கெடுபிடிகள் செய்வதை தவிர்க்கும்படி அவர் கூறினார்.
ரேஷன் அரிசி
பல இடங்களில் தரமற்ற ரேஷன் அரிசி வினியோகம் நடைபெறுகிறது. (உதாரணத்திற்கு கையோடு அவர் அரிசி கொண்டு வந்திருந்தார்) இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் தரமற்ற அரிசி வழங்கப்படக் கூடாது என எச்சரித்தார்.
போக்குவரத்து
ஈச்சனாரி ரயில்வே மேம்பாலம் உள்பட அனைத்து மேம்பால பணிகளும் துரிதப்படுத்தப்பட வேண்டும். போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகளில் சுரங்கப்பாதை மற்றும் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கும் திட்டத்தை அதிகாரிகள் வகுத்துத் தரவேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
வழியெங்கும் டிஜிட்டல் பேனர் - எரிச்சல் அடைந்த அமைச்சர் (தட்ஸ் தமிழ் எக்ஸ்க்ளூசிவ்)
சிறப்பு திட்ட அமலாக்க அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் கோவை வந்த அமைச்சர் வேலுமணிக்கு கோவையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை வருகை
தமிழ அரசின் சிறப்பு திட்ட அமலாக்க துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் தொண்டாமுத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வேலுமணி நேற்று காலை கோவை வந்தார். அவருக்கு ரயில்நிலையத்தில் தாரை, தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுமக்களுக்காக காத்திருந்த அமைச்சர்
காலை 6:45 மணியளவில் ரயிலில் வந்திறங்கிய அமைச்சர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு மணி நேரம் ரயில் நிலையத்தில் காத்திருந்த பின்பே வெளியே வந்தார். அவரை கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தா. மலரவன், சேலஞ்சர் துரை, தாமோதன், ஓ.கே.சின்னராஜ், சின்னச்சாமி, முத்துக்கருப்பண்ணசாமி, ஆறுக்குட்டி ஆகியோர் வரவேற்றனர்.
டிஜிட்டல் பேனர்
வேலுமணியை வரவேற்கும் பொருட்டு கோவை நகரின் பல்வேறு இடங்களில் கட்சிக்காரர்கள் டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர். குறிப்பாக அவரது இல்லத்திற்குச் செல்லும் பாலக்காடு சாலையில், ஆத்துப்பாலம் துவங்கி கோவைப்புதூர் பிரிவு வரை இருமருங்கிலும் நூற்றுக்கணக்கான டிஜிட்டல் வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கண்டு எரிச்சல் அடைந்த அமைச்சர், உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தும்படி கட்சிக்காரர்களை எச்சரித்தார். அவரது உத்தரவின் பேரில் டிஜிட்டல் பேனர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications