கனிமொழியை பார்க்க நாளை டெல்லி செல்கிறார் கருணாநிதி

கனிமொழி கைது செய்யப்பட்டது முதல் அதிர்ச்சியில் இருக்கிறார் கருணாநிதி. இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உங்களது மகள் இப்படி ஒரு வழக்கில், செய்யாத குற்றத்துக்காக கைதாகி சிறையில் அடைத்தால் உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அதேபோலத்தான் நானும் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் கருணாநிதி.
கனிமொழியைப் பார்க்க கருணாநிதி டெல்லி செல்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் இப்போது நான் போகவில்லை என்றுகூறியிருந்தார் கருணாநிதி. ராசா கைதாகி இத்தனை மாதங்களாகியும் அவரை கருணாநிதி இதுவரை சந்திக்கவில்லை.
இது திமுகவினர் மத்தியில் உறுத்தலாகவே இருந்தது. இந்த நிலையில் கனிமொழியைப் பார்க்க கருணாநிதி போனால் அது சர்ச்சையை, சலசலப்பை ஏற்படுத்தும் என்று கருணாநிதி தரப்பில் கருதப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் தற்போது தனது மனதை மாற்றிக் கொண்டு விட்ட கருணாநிதி, மகளைப் பார்ப்பதற்காக நாளை டெல்லி விரைகிறார்.
முன்னதாக நேற்று கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், கருணாநிதி, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, திமுக மத்திய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பின்னணியில் நாளை டெல்லி விரைகிறார் கருணாநிதி. தனது பயணத்தின்போது சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்திக்க அவர் முயற்சிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications