சட்டசபையில் நாளை புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு-27ம் தேதி சபாநாயகர் தேர்வு
சென்னை: 14வது சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்கின்றனர். சபாநாயகர் தேர்தல் 27ம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்து விட்டது. புதிய சட்டசபை உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்காமல் உள்ளனர். இடையில் புதிய சட்டசபைக் கட்டடத்திற்கு மாறியிருந்த சட்டசபை தற்போது மீண்டும் பழைய கட்டடத்திற்கே இடம் பெயர்ந்து வருகிறது.
பழைய சட்டசபை அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகள் படு வேகமாக நடந்து வருகின்றன.
இங்கு நாளை புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. நாளை முற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏக்களுக்கு் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இதற்கு முன்னதாக இன்றுகாலை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் செ.கு. தமிழரசனுக்கு ஆளுநர் பர்னாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
நாளை எம்.எல்.ஏக்கள் பதவியேற்பையொட்டி சட்டசபை மண்டபம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
நாளை முதலில் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொள்வார். பதவியேற்பு நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் 27ம் தேதி மீண்டும் சட்டசபை கூடும். அப்போது சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும். ஜூன் 3ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் கூடும் சபையில், ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்துவார். அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும். அதன் பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கும்.
இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.












Click it and Unblock the Notifications