தமிழகத்தில் மீண்டும் மண்டையைப் பிளக்கும் கடும் வெயில்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சற்று குறைந்திருந்த கடும் வெயில் தற்போது மீண்டும் தலை காட்டத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல நகரங்களில் கடும் வெயில் அடித்து வருவதாலும், அனல் காற்று வீசுவதாலும் மக்கள் நெளிந்து கொண்டுள்ளனர்.
வருகிற 29ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருகிறது. ஆரம்பத்தில் மிகக் கடுமையாக இருந்த வெயில், சரியாக, சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளன்று வெகுவாக குறைந்தது. பின்னர் படிப்படியாக குறைந்தது. பல இடங்களில் கோடை மழையும் பெய்து வெயிலை வெகுவாகத் தணித்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கடுமையாக உள்ளது.
அதிகபட்சமாக திருத்தணியில் 106.88 டிகிரி வெயில் நேற்று பதிவானது. சென்னையிலும் வெயில் கடுமையாக உள்ளது. இருப்பினும் முன்பை விட சற்று குறைவாகவே உள்ளது. அதேசமயம் பகல் நேரத்தில் வெயில் கடுமையாக உள்ளது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர்தான் இதில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அனல் காற்றுத் தாக்காத வகையில் முகமூடி அணிந்து கொண்டு செல்வதைப் போல கர்ச்சீப்பால் முகத்தை, தலையை மூடியபடி செல்கின்றனர்.
கையில் குடைகளையும், துப்பட்டாக்களை குடை போலவும் பாவித்து பெண்களும் வெயிலை தங்களால் முடிந்தவரை சமாளிக்கின்றனர்.
இன்றும் சென்னையில் வெயில் சற்று கடுமையாகவே உள்ளது.
மதுரை, சேலம், நாகை, கடலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் வெயில் மீண்டும் வறுத்தெடுப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications