ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: கோவையில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை
கோவை: கோவையில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு எழுதிய 923 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
ஐ.ஐ.டி. தேர்வு
நாடு முழுவதிலும் உள்ள 'இந்திய தொழில்நுடக் கழகம்" (ஐ.ஐ.டி.) கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 9 ஆயிரத்து 618 இடங்களுக்கு 4 லட்சத்து 68 ஆயிரத்து 240 பேர் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி நுழைவுத்தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள்
நுழைவுத் தேர்வின் முடிவுகள் கடந்த புதன்கிழமை(நேற்று) வெளியாகின. இதில் தேர்வு எழுதிய 4.68 லட்சம் பேர்களில் 13 ஆயிரத்து 602 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தைச் சேர்ந்த இம்மாடி பிருத்வி தேஜ் எனும் மாணவர் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.
மொத்தமாக கவிழ்ந்த கோவை
தமிழகத்தைப் பொருத்த வரை 8 ஆயிரத்து 583 பேர் இந்த தேர்வை எழுதினர். அதில் 353 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் கோவை நகரில் நுழைவுத்தேர்வு எழுதிய 923 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி அடையவில்லை. இதனால் பெற்றோர்கள் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
கோவையில் ஏராளமான தனியார் பயிற்சியகங்கள் ஆறாம் வகுப்பில் இருந்தே ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு உங்கள் குழந்தைகளை தயார் செய்கிறோம் என பெற்றோர்களிடம் இருந்து பெருந்தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன. அவர்கள் நடத்தும் மாதிரி தேர்வுகளில் மதிப்பெண்களைக் குவித்தவர்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார்கள்.
அதிகரிக்கும் கட் ஆஃப் மார்க்
இந்த ஆண்டில் 20 முதல் 30 வரை கட் ஆஃப் மார்க் உயரக்கூடும் என்று தெரிகிறது. இதனால், முக்கிய பாடங்களில் சேர்வதற்கு மாணவர்களிடையே கடும்போட்டி இருக்கும். கடந்த ஆண்டில் பொதுப்பிரிவினருக்கு 190 கட் ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது. இந்த ஆண்டு 229 வரை கட் ஆஃப் இருக்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் விபுல் முதலிடம்
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையைச் சேர்ந்த விபுல் வெங்கட்ராமன் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 63வது ரேங்க் பெற்றுள்ளார்.
இதேபோல சென்னையைச் சேர்ந்த யஷ்வந்த் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 67வது ரேங்க் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications