ஏமனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை – சீமான் கோரிக்கை !
மதுரை : ஏமனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை:
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில் அந்நாட்டு அதிபரான அலி அப்துல்லாசலே பதவி விலகக் கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிபருக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தின் விளைவாக அங்குள்ள தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தலைநகர் சானா அருகே உள்ள ராணுவ வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் ராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். செவிலியர்கள் மீதான தாக்குதல் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
செவிலியர்கள் தங்கியுள்ள விடுதியில் சில தினங்களுக்கு முன்பு நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல் முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால் அனைவரும் உயிர் தப்பினர்.
ஆனால், இவர்களின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நீடிக்கிறது.உயிர் பயத்தில் கடந்த சில நாட்களாக இருட்டறையில் பதுங்கி, பசி பட்டினியால் வாடி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக அவர்கள் தங்கியுள்ள அறைகளுக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தாக்குதல், மற்றொரு பக்கம் உணவு, தண்ணீர் இன்றி செவிலியர்கள் தவித்து வருகின்றனர்.
இப் பொழுதைய நிலையில் அங்கு போராட்டம் மென்மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. தனது ராணுவத்தினருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி ஏமன் அரசும் ராணுவமும் நம் செவிலியர்களை இந்தியாவிற்கு அனுப்ப மறுத்து வருகிறது.
இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு ஏமனில் சிக்கியுள்ள தமிழக செவிலியர்களை உடனையாக மீட்க துரித நடவடிக்கை எடுத்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications