முல்லா ஒமர், ஜவாஹிரி, இலியாஸ் காஷ்மீரி உள்ளிட்டோரை அழிக்க பாக்.குக்கு அமெரிக்கா உத்தரவு
இஸ்லாமாபாத்: தலிபான் தலைவர் முல்லா ஒமர், அல் கொய்தா தலைவர் அல் ஜவாஹிரி உள்ளிட்ட தீவிரவாத தலைவர்களை அழித்தொழிக்க வேண்டும் அல்லது அவர்கள் பிடிபட்டால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு கண்டிப்புடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளது அமெரிக்கா என்று தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் ஐந்து அதி பயங்கர தீவிரவாதிகள் குறித்த பட்டியலை பாகிஸ்தானிடம் அந்த நாடு கொடுத்துள்ளது. அந்த பட்டியலில் மேற்கொண்ட தலைவர்கள் போக சிராஜ் ஹக்கானி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
சிராஜ் ஹக்கானி ஹூஜி அமைப்பின் தலைவன் ஆவான்.
இலியாஸ் காஷ்மீரி அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவன். அதேபோல அல் கொய்தா அமைப்பின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவனாக கருதப்படும் ஆதியா அப்தல் ரஹ்மானின் பெயரும் இப்பட்டியலி்ல இடம் பெற்றுள்ளது. இவன்தான் பின்லேடனுக்கும், அல் கொய்தா அமைப்பினருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்கு உதவி வந்தவன் என்று கூறப்படுகிறது.
இவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பாகிஸ்தானிடம் கொடுத்துள்ள அமெரிக்கா, இவர்களை பாகிஸ்தான் வேட்டையாடி அழிக்க வேண்டும். அல்லது இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் அதை அமெரிக்காவிடம் கொடுக்க வேண்டும். அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு இவர்களை அழிக்க உதவ வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளதாம்.
மேலும் இந்த ஐந்து அதி பயங்கர தீவிரவாதிகளும் அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கும் மிகப் பெரிய ஆபத்து என்றும் பாகிஸ்தானை அறிவுறுத்தியுள்ளதாம் அமெரிக்கா.
மேலும் பாகிஸ்தான் எல்லைக்குள் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும். அல்லது அமெரிக்காவே அதிரடி நடவடிக்கையில் இறங்கி தீவிரவாதிகளை வேட்டையாடும் என்றும் தெள்ளத் தெளிவாக பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறி விட்டதாம்.












Click it and Unblock the Notifications