எம்.எல்.ஏவாக பதவியேற்ற கருணாநிதி, துரைமுருகன்

சபாநாயகர் ஜெயக்குமார் அறையில் இந்த பதவியேற்பு நடைபெற்றது.
தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏக்கள் கடந்த மே 23ம் தேதி தற்காலிக சபாநாயகர் செ.கு. தமிழரசனிடம் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
அதில் விடுபட்ட அமைச்சர் என்.ஆர்.சிவபதி, அதிமுக உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கடந்த வெள்ளியன்று சபாநாயகர் ஜெயக்குமாரிடம் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் கனிமொழியைப் பார்க்க டெல்லி போயிருந்த திமுக தலைவர் கருணாநிதியும், துரைமுருகனும் மட்டும் பதவியேற்காமல் இருந்தனர். அவர்கள் இன்று சபாநாயகர் அறையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
கோட்டையில் உள்ள சபாநாயகர் அறையில் இன்று காலை 11 மணியளவில் அவர்களுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கூர்ந்து கவனியுங்கள்...
பதவியேற்ற பின்னர் கருணாநிதியிடம், உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கூர்ந்து கவனியுங்கள் என்று பதிலளித்தார்.
அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு-சபாநாயகர் ஜெயக்குமார்:
பின்னர் சபாநாயகர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி,
கேள்வி: எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்று விட்டார்களா?
பதில்: 233 எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுள்ளார்கள். ஒரிடம் காலியாக உள்ளது. நியமன உறுப்பினர் நியக்கப்பட்டதும் அவர் பதவி ஏற்றுக் கொள்வார்.
கேள்வி: சட்டமன்றத்தில் கட்சிகளுக்கு இருக்கைகள் எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது?
பதில்: சட்டமன்ற விதிகளின்படி இருக்கைகள் ஒதுக்கப்படும். 3ம் தேதிக்குள் அது முடிவாகும்.
கேள்வி: உறுப்பினர்களுக்கு சமமாக பேச வாய்ப்பு அளிக்கப்படுமா?
பதில்: அம்மா வழங்கிய ஆலோசனைப்படி அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். சட்டசபையில் நான் ஆற்றிய உரையிலும் இதை குறிப்பிட்டிருக்கிறேன்.
கேள்வி: தி.மு.க. எம்.எல்.ஏ. துரைமுருகன் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது மனுவில் தவறான தேதியை குறிப்பிட்டு இருப்பதாகவும், எனவே அவரை எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க அனுமதிக்ககூடாது என்றும் புகார் மனு தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?
பதில்: அது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்












Click it and Unblock the Notifications