பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்படும்-விஜயகாந்த்
ரிஷிவந்தியம்: பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படும் என்று தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்க் கட்சி்த் தலைவருமான விஜயகாந்த் கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்ற அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அத்தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சார வேனில் வந்த விஜயகாந்த் மணலூர்பேட்டை, தீர்ப்பனந்தல், எருத்தனூர், கடம்பூர், மருதூர், சிறுவரங்கம் உள்ளிட்ட இடங்களில்கூட்டம் குறைவாக உள்ள இடங்களில் வேனில் உள்ளேயே இருந்தபடி பொது மக்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டார். கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் பொதுமக்களிடையே பேசினார்.
சிறுவரங்கத்தில் உள்ள ஆதிரங்கநாதர் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனமும் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்படும். கரும்பு சாகுபடி அதிகம் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் விவசாயிகள் பாம்பு கடித்து அடிக்கடி இறக்கின்றனர். ஆகையால் பாம்புக் கடிக்கான மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
பகண்டை கூட்டுரோட்டில் இன்று மதிய உணவை முடித்த விஜயகாந்த் தனது மீண்டும் தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் இளைஞர்களும், பெண்களும் தங்களது படிப்பை மேம்படுத்திக்கொள்ள வசதிகள் இல்லை. ஆகையால் இப்பகுதியில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் அமைக்க முயற்சி செய்யப்படும் என்றார்.
காஞ்சியில் விஜயகாந்த் குடும்பத்தோடு சாமி தரிசனம்:
முன்னதாக நேற்று விஜயகாந்த் குடும்பத்தோடு காஞ்சீபுரம் சென்று காமாட்சி அம்மனை வழிபட்டார்.
விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினர் நேற்று மாலை காஞ்சீபுரம் வந்தனர். காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
விஜயகாந்தும், அவரது குடும்பத்தாரும் பயபக்தியோடு சாமி கும்பிட்டனர். அவர்களுக்கு அர்ச்சகர்கள் சால்வை போர்த்தி மரியாதை செய்தனர். பின்னர் குங்குமம், பிரசாதம் கொடுக்கப்பட்டது.
தரிசனம் முடித்து வெளியே வந்த விஜயகாந்த் அவரைக் காண கோயிலுக்கு முன் திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கையை அசைத்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டார்.
சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முன் காஞ்சீபுரம் வந்து காமாட்சி அம்மனை தரிசித்தார். தற்போது வெற்றி பெற்ற பிறகு மீண்டும் காமாட்சி அம்மனை தரிசித்துள்ளார்.












Click it and Unblock the Notifications