எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு ஒரே ஒரு பின்லேடன்தான் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தான். அவனையும் அமெரிக்கா அழித்து விட்டது. ஆனால் இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளனர். அவர்களால் இந்தியாவுக்கு பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை நிபுணர் ஸ்டீவ் கோல் எச்சரித்துள்ளார்.
நியூ அமெரிக்கா பவுண்டேஷன் என்ற அமைப்பின் தலைவரான இவர் தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான துறையின் நிபுணர் ஆவார்.
இவர் இந்தியாவின் முன்பு உள்ள பயங்கரவாத சவால்கள் குறித்துக் கூறுகையில், அமெரிக்காவைத் தாக்கிய அல் கொய்தாவை நிறுவிய பின்லேடனை அமெரிக்கா, பாகிஸ்தானில் வைத்து அழித்து விட்டது.
ஆனால் இந்தியாவின் நிலைமை அப்படி இல்லை. ஏராளமான பின்லேடன்கள் பாகிஸ்தானில் இன்னும் பதுங்கியுள்ளனர். இவர்கள் அத்தனை பேரும் இந்தியாவுக்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய வல்லமை பெற்றவர்கள். இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாத செயல்களை செய்து, பல நூறு பேரின் உயிரைக் குடித்தவர்கள் இன்றும் பாகிஸ்தானில் பத்திரமாக பதுங்கியுள்ளனர்.
பாகிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தி, இந்திய எல்லைக்குள் ஊடுறுவி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவோரைக் குறி வைத்து அமெரிக்கா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை. இந்த விஷயத்தில் இதுவரை பாகிஸ்தானை அமெரிக்கா நெருக்காமல் இருந்து வருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
பாகிஸ்தானிய ராணுவம் தொடர்ந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இந்திய எல்லைக்குள் ஊடுறுவ வைத்து தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதை இந்தியர்கள் பார்த்துக் கொண்டு உள்ளனர். பல வருடங்களாக இது தொடர்கிறது. இதற்கு முடிவே இல்லாமல் நீண்டு கொண்ட போகிறது. இதைத் தடுக்க முடியாமல் இந்தியர்கள் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர்.
பாகிஸ்தானை கடுமையாக கண்டித்து இந்த செயல்களைத் தடுக்க முனையாமல் இருப்பது கண்டிப்புக்குரியது.
இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுறுவ வைத்து நாசச் செயல்களில் ஈடுபடுவதை ஆதரிப்பதை ஒரு கொள்கையாகவே பாகிஸ்தான் கடைப்பிடித்து வருவது கண்கூடாக தெரிகிறது.
அமெரிக்காவுக்கு இருந்தது ஒரே ஒரு பின்லேடன்தான். ஆனால் இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள் உள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications