சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் தர சிபிஐ கோர்ட் மறுப்பு
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் அளிக்க டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட் மறுத்து விட்டது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்தவர் சுரேஷ் கல்மாடி. காங்கிரஸ்காரரான இவர் பெரும் ஊழலில் ஈடுபட்டு நாட்டையே தலைக்குனிவுக்குள்ளாக்கி விட்டார். இவரும், இவரது கூட்டாளிகளும் தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டை அணுகினார் கல்மாடி. அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தல்வந்த் சிங், கல்மாடியின் ஜாமீன் மனுவைத்தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அவர் மட்டுமல்லாது, போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இயக்குநர் ஜெனரல் ஏ.எஸ்.வி.பிரசாத்தின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். மிகப் பெரிய குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்பதால் ஜாமீன் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
பிரசாத் கல்மாடிக்கு மிகவும் நெருங்கியவர். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் வெளியில் விட்டால் சாட்சியங்களைக் கலைத்து விடுவார்கள் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications