ராம்தேவ் வெளியேற்றத்தைக் கண்டித்து டெல்லியில் அத்வானி தலைமையில் பாஜக சத்தியாகிரகம்
டெல்லி: மக்களை அவமானப்படுத்தி வருகிறது மத்திய அரசு. இந்த அரசு பதவியில் நீடிக்க எந்த அருகதையும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
பாபா ராம்தேவ் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட விதத்தைக் கண்டித்து நேற்று இரவு 7 மணியளவில் மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டில் பாஜக சத்தியாகிரகப் போராட்டத்தில் குதித்தது.
மூத்த தலைவர்களான அத்வானி, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் நூற்றுக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின்போது காங்கிரஸைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.
நேற்று இரவு முழுவதும் நீடித்த சத்தியாகிரகம் இன்றும் தொடர்கிறது. இன்று மேலும் ஏராளமான பாஜகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது அத்வானி பேசுகையில் மக்களை மிகப் பெரிய அளவில் அவமானப்படுத்தி விட்டது மத்திய அரசு. ஊழலை ஒழிக்க இந்த அரசினால் முடியவில்லை. மாறாக ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்துவோர் மீது வன்முறையை ஏவி விடுகிறது. மக்களை அவமானப்படுத்துவதை விட்டு விட்டு கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. அப்படிச் செய்யுமாறு வலியுறுத்துவோர் மீது அடக்குமுறையை ஏவி விடுகிறது.
ஜாலியன்வாலாபாக் சம்பவத்தை விட மிகக் கொடூரமான செயலை ராம்லீலா மைதானத்தில் ஏவி விட்டுள்ளது மத்திய அரசு. இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications