டெல்லிக்கு திரும்ப முயன்ற ராம்தேவை தடுத்து நிறுத்திய போலீஸ்
முசாபர்நகர்: டெல்லியிலிருந்து வலுக்கட்டாயமாக ஹரித்வார் அனுப்பப்பட்ட பாபா ராம்தேவ் மீண்டும் டெல்லிக்குச் செல்வதற்காக வந்தபோது அவரை தடுத்து நிறுத்திய உ.பி. போலீஸார் மீண்டும் அவரை ஹரித்வாருக்கு அனுப்பி வைத்தனர்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கானோருடன் உண்ணாவிரதம் இருந்தார் பாபா ராம்தேவ். ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை வன்முறை மூலம் கலைத்து சிதறடித்து விட்டது மத்திய அரசு. பிரதமர் மன்மோகன் சிங்கின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என பாராமல் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கலைத்தனர்.
ராம்தேவையும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றி விமானம் மூலம் ஹரித்வாருக்குக் கொண்டு போய் விட்டு விட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஏழரை மணியளவில் ராம்தேவ் ஒரு கார் மூலம் மீண்டும் டெல்லி செல்ல கிளம்பினார். ஆனால் அவரது காரை உ.பி. மாநிலம் முசாபர் நகர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி மாவட்டம் ஆகியவற்றின் எல்லைப் பகுதியில் வைத்து உ.பி. போலீஸார் மடக்கி நிறுத்தினர்.
பின்னர் அவரது காரை தொடர்ந்து செல்ல அனுமதிக்காமல் திரும்பிச் செல்லுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து ராம்தேவ் டெல்லி செல்ல முடியாமல் மீண்டும் ஹரித்வாருக்கேத் திரும்பினார்.
இதுகுறித்து ராம்தேவ் கூறுகையில், நான் நோய்டாவில் போராட்டம் நடத்துவதற்காக சென்றேன். ஆனால் முசாபர்நகர் வரை மட்டுமே என்னால் செல்ல முடிந்தது. 144 போலீஸ் தடை உத்தரவு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவரும், எஸ்.பியும் என்னைக் கைது செய்யப் போவதாகக் கூட மிரட்டினார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications