சென்னையில் பயங்கரம்-காதல் மணம் புரிந்த சாப்ட்வேர் என்ஜீனியர் எரித்துக் கொலை
சென்னை: சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் எரித்துக் கொல்லப்பட்டார். அவரை கடத்திச் சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். இவர் சமீபத்தில் பெரம்பலூரைச் சேர்ந்தவரான சரண்யா என்பவரை காதலித்து மணம் புரிந்தார். சரண்யா, சென்னையில் எம்.பி.பி.எஸ், இறுதியாண்டு படித்து வருகிறார்.
ஜூன் 2ம் தேதி பார்த்தசாரதி வழக்கம் போல வேலைக்குச் சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவருடைய மனைவி சரண்யா சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில், ஜூன் 4ம் தேதி திண்டிவனம் அருகே எரிந்த நிலையி்ல் ஒரு உடல் கைப்பற்றப்பட்டது. அதை அடையாளம் காட்ட சரண்யா அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அது தனது கணவரின் உடல்தான் என்று சரண்யா அடையாளம் காட்டினார்.
இதையடுத்து போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பார்த்தசாரதியை கடத்திச் சென்று கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
தனது காதல் திருமணத்திற்கு தனது குடும்பத்தினர் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார் சரண்யா. மேலும் தனது கணவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும், முனவிரோதமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.