ஜெ.வை தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது அவதூறு வழக்கு
திருவாரூர்: திமுக பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் நகர அதிமுக செயலாளர் ஆர்.டி.மூர்த்தி திருவாரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
திருவாரூரில் கடந்த 6-ம் தேதி திமுகவின் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடந்தது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய பொன்முடி முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி ஒருமையில் தரக்குறைவாக பேசினார். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஜெயலலிதாவைப் பற்றி அவர் தரக்குறைவாகப் பேசியது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.
அவரது புகாரின்பேரில் போலீசார் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது தனிநபரை தரக்குறைவாக ஒருமையில் அவதூறாக பேசியதாகவும், அச்சுறுத்தல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.