இலங்கைக்கு தடை விதிக்க கோரும் ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு
சென்னை: இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்து அந்த நாட்டை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு திமுக இன்று ஆதரவு தெரிவித்தது.
இந்த தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு திமுக சார்பில் துரைமுருகன் பேசினார். அதன் பின்னர் விஜயகாந்த் பேசினார். அப்போது திமுக அரசு குறித்து சிலக ருத்துக்களை அவர் கூறினார். இதையடுத்து துரைமுருகன் எழுந்து பதிலளிக்க அனுமதி கோரினார். ஆனால் சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசுகையில்,
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடும் தீர்மானத்தை முதல் அமைச்சர் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை ஆதரிப்பது அனைவரின் கடமை. நாங்களும் ஆதரிக்கிறோம் என்று பேசினேன்.
சிலர் தி.மு.க.வை மறைமுகமாக தாக்கி பேசினார்கள். நான் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தனிப்பட்ட தாக்குதலை வெளியே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பேச தொடங்கிய உடனே தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், தி.மு.க.வையும் சரமாரியாக தாக்கி பேசினார்.
எனக்கு பதில் சொல்ல தெரியும். விளக்கம் அளிக்க அனுமதி வேண்டும் என்று கேட்டேன். எதிர்க்கட்சி தலைவர் பேசி முடித்த பிறகு என்னை பேச அனுமதிப்பதாக கூறினார். ஆனால் அவர் பேசி முடிந்த பிறகும் அனுமதி தரவில்லை. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம். ஆனால் நாங்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications