ராம்தேவின் உடல் நிலை மோசமடைகிறது-உண்ணாவிரதத்தை நிறுத்த டாக்டர்கள் யோசனை
ஹரித்வார்: ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் பாபா ராம்தேவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உண்ணாவிரதத்தை நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ராம்தேவ் தொடங்கினார். ஆனால் நள்ளிரவில் அதிரடியாக புகுந்த போலீஸார் போராட்டத்தைக் கலைத்து, ராம்தேவை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஹரித்வாருக்கு கொண்டு வந்து விட்டு விட்டனர்.
இதையடுத்து ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார் ராம்தேவ்.
இந்த நிலையில் அவருடைய உடல் நிலை மோசமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரைக் கண்காணித்து வரும் டாக்டர்கள், உடனடியாக உண்ணாவிரதத்தை நிறுத்த வேண்டும் என்றும், நீர்ச்சத்தை நிலைநிறுத்த தண்ணீர் உள்ளிட்ட நீர் உணவை அருந்த வேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து டாக்டர் யோகேஷ் சர்மா கூறுகையில், அவருடைய உடல் நிலை மோசமடைந்து வருகிறது. எடை குறைந்துள்ளது. உடலில் நீர்ச்சத்து குறைந்து வருகிறது. உண்ணாவிரதத்தை நிறுத்துமாறும், பழச்சாறு, பால் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இன்று ஐந்தாவது நாளாக ராம்தேவின் உண்ணாவிரதம் தொடருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.