ஜெ.வை தரக்குறைவாக பேசிய பொன்முடிக்கு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்
மதுரை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி தரக்குறைவாக ஒருமையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது,
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 136 பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர். இது கடந்த தேர்தலை விட 20 சதவீதம் குறைவு.
இதை வைத்து பெண்களுக்கு அரசியல் ஆர்வம் குறைந்து விட்டது என கூற முடியாது. சொல்லப்போனால் திமுக, அதிமுக, தேமுதிக கட்சி தலைமைகளிடம் வேட்பாளர்களாக நிற்க விருப்பம் தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்திருந்தனர். அவர்கள் வேட்பாளர்களாக தேர்வாகவில்லை என்பது தான் பிரச்சனை.
பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். மேலும் பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பெண்கள் ஏராளமான அவதூறுகளை சந்திக்கின்றனர்.
முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பரவலாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளும், பேசப்பட்ட மேடைப் பேச்சுகளும் மிகவும் தரம் தாழ்ந்தே அமைந்தன.
சமீபத்தில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி மிகவும் இழிவாகப் பேசியுள்ளது பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. பொன்முடியின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
பெண்களை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக நாம் பார்க்கவில்லை. ஆனால் விமர்சனம் பாலியல் ரீதியாகவோ, பாலின பாகுபாட்டுடன் இருப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications