ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று பேசினார்.
அப்போது, தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் ஆக்கப்படும், மின்சார வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும், தீ விபத்தினால் பாதிக்கப்படும் குடிசைகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை உயர்த்தப்படும், பட்டா மாறுதல் முறை எளிமைப்படுத்தப்படும் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் பேச்சு விவரம்:
இந்த தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் உண்மையான "ஜனநாயகம்'' மலர தமிழக மக்கள் வழிவகை செய்து உள்ளனர். மக்களின் உள்ளக்கிடக்கை இந்த தேர்தலில் பிரதிபலிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், கிடைத்துள்ள இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.
மக்கள் சக்தியை முடக்கி விடலாம் என்ற மமதையில், "தேர்தல் முடிந்து மே மாதத்திற்கு பிறகு அ.தி.மு.க. என்ற இயக்கம் இருக்காது'' என்று பேட்டி அளித்தார் பாராளுமன்றத்தில் பதில் அளிக்கவே அஞ்சும் ஒரு மத்திய அமைச்சர்.
இன்று அந்த அமைச்சர் இருக்கின்ற இடம் தெரியாத அளவுக்கு; நான் எதிர்க்கட்சி தலைவராக இங்கே உரையாற்றிய நாட்களில் என்னை பேசவிடாமல் குறுக்கீடுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த முன்னாள் மைனாரிட்டி தி.மு.க. அரசின் அமைச்சர்கள்; இந்த அவையிலேயே நுழைய முடியாத அளவுக்கு மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர்.
தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கவும், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், தமிழ்நாட்டை மீண்டும் அமைதிப்பூங்காவாக மாற்றவும் அயராது பாடுபடுவேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்வெட்டு ஏன்?
இங்கே பேசிய உறுப்பினர்கள் பலரும், தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை சூழ்நிலை பற்றி கருத்து தெரிவித்தார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் மின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து, மக்களுக்கு எவ்வளவு நேரம் மின்சாரம் கிடைக்கும் என்பதே தெரியாத ஒரு நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டனர்.
சென்னை மாநகரில் ஒரு மணி நேரம், மாநிலத்தின் இதர பகுதிகளில், மூன்று மணி நேரம் மின் தடை என முந்தைய தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால், உண்மையில், அதற்கு மேலும் அறிவிக்கப்படாத மின் தடையாக மேலும் 2, 3 மணி நேரம் எல்லா பகுதிகளிலும் மின் தடை இருந்தது என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.
மேலும், தொழிற்சாலைகளுக்கு 20 சதவீதம் மின் வெட்டும், மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான உச்ச மின் தேவை காலத்தில் 90 சதவீதம் மின் வெட்டும் அமல்படுத்தப்பட்டது. தேவைக்கேற்ப மின் திட்டங்களை ஏற்படுத்தாததும், நிர்வாக சீர்கேடுகளும் தான் இவ்வாறு மின் வெட்டு ஏற்பட முக்கிய காரணம் ஆகும்.
கடந்த ஐந்தாண்டு முழுமையும், இவற்றை எல்லாம் மறைத்து, முந்தைய எனது ஆட்சிக் காலத்தில் திட்டங்கள் தீட்டப்படாதது தான் மின் வெட்டுக்குக் காரணம் என உண்மைக்கு மாறான செய்தியை முந்தைய தி.மு.க. அரசு பரப்பி வந்தது.
எனது அரசு மேற்கொண்ட முயற்சிகளை அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தொடர்ந்திருந்தால் தற்போது மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை சுலபமாக தவிர்த்திருக்க முடியும். ஆனால், இத்திட்டங்கள் அமைவதற்கான இடங்களை தெரிவு செய்ய முந்தைய தி.மு.க. அரசு காலதாமதம் செய்ததால் இத்திட்டங்கள் இன்னமும் தொடங்கப் பெறாமல் உள்ளன.
2001 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில், அதாவது, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், நம்முடைய அனல் மின் நிலையங்கள் முறையான பராமரிப்பினாலும், தகுந்த கண்காணிப்பினாலும் மிக நன்றாக செயல்பட்டு, மத்திய எரிசக்தி துறையினுடைய சிறந்த உற்பத்தித் திறனுக்கான தேசிய விருதுகளைப் பெற்றன. ஆனால், 2006 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில், அதாவது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில், எந்த விதமான விருதையும் இந்த அனல் மின் நிலையங்கள் பெறவில்லை.
காற்றாலை மின் உற்பத்தி
6000 மெகாவாட்டிற்கும் அதிகமான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. ஆனால், அந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான மின் தொடரமைப்பு வசதி இல்லாததால், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை முழுமையாகப் பெற இயலவில்லை. தேவையான மின் தொடர் கட்டமைப்பு வசதிகளை எனது அரசு விரைவில் ஏற்படுத்தும்.
பழுதடைந்த நிலையில் உள்ள மின் நிலையங்களை உடனே சரி செய்ய போர்க்கால அடிப்படையில் எனது அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 2,518 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக நிறுவப்பட்டது. ஆனால், முந்தைய தி.மு.க. ஆட்சியில் வெறும் 206 மெகாவாட் மட்டுமே நிறுவு திறன் அதிகரிக்கப்பட்டது. இதே போன்று, எனது முந்தைய ஆட்சி காலத்தில் 2,595 மெகாவாட் கூடுதல் மின் திட்டங்கள் நிறுவுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.
முந்தைய தி.மு.க. அரசு மின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக வியாபாரிகளிடம் இருந்தும், மின் சந்தையிலிருந்தும், மின் திருப்புதல் முறையிலும், மின் கொள்முதல் செய்து வந்தது. இதில் மின் கொள் முதலுக்காக சராசரியாக, யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாய் 50 பைசா வரை செலவிடப்பட்டது. ஆனால், இந்திய மின்சார சட்டம், 2003-ன் படி, நீண்ட கால கொள்முதல் முறையான மின் கொள்முதல் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் ஏற்கெனவே மின் கொள்முதல் செய்த விலையில் பாதி விலைக்கே மின் கொள்முதல் செய்திருக்க முடியும்.
முறையான மின் கொள்முதல்
தற்போது மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறை நிலையை மாற்றி அமைக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் எனது அரசு பல்வேறு முயற்சிகளை எடுக்கும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல பழுதடைந்த மின் நிலையங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு உள்ளன.
குறுகிய கால மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் முறையை இணைத்து லாபகரமான மற்றும் நிலையான மின் கொள்முதல் கொள்கையை எனது அரசு கடைபிடிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில், மின் வாரியத்தின் நிறுவு திறன் மேலும் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக அதிகரிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும்
தற்போது, எனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும், வரும் ஜுலை மாதம் முதல் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும். படிப்படியாக, மின் வெட்டே இல்லா மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில், 2006-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை தமிழ்நாடு மின் வெட்டே இல்லாத மாநிலமாகத்தான் இருந்தது. இன்னும் அதிகமான மின் நிறுவுத் திறனுடன் அதைவிட சுபிட்சமான நிலையை இந்த ஆட்சிக் காலத்தில் அடைவோம் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.












Click it and Unblock the Notifications