குற்றவாளிகள் பிடிபடாத பத்திரிக்கையாளர்கள் கொலை வழக்குகள்-7வது இடத்தில் இந்தியா!
டெல்லி: பத்திரிக்கையாளர்கள் கொலைச் சம்பவங்களில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.
மும்பையில் மிட் டே பத்திரிக்கையின் கிரைம் நிருபர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் இந்திய பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கலப்பபட பெட்ரோல், மண்ணெண்ணய் மாபியா கும்பல்தான் இந்த கொலைக்குப் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கும்பலுக்கு இதுவரை எத்தனையோ உயிர்கள் பறி போயுள்ளன. ஆனால் மகாராஷ்டிர அரசு இதுவரை இந்தக் கும்பலின் அட்டகாசத்தையும், கொலை வெறியாட்டத்தையும் ஒடுக்க உருப்படியான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் உலகில் அதிக அளவில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் சம்பவங்களில், குற்றவாளிகள் பிடிபடாத வழக்குகளில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது.
2011ல் உலக அளவில் தீர்வு காணப்படாத பத்திரிக்கையாளர் கொலைச் சம்பவங்களில் இந்தியா 7வது இடத்தில் இருப்பதாக சர்வதேச மீடியா நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தீர்வு காணப்படாத பத்திரிக்கையாளர் கொலைச் சம்பவங்களைக் கொண்டுள்ள 13 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
2001 ஜனவரி 1 முதல் 2010 டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் நடந்த கொலைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் ஏழு பத்திரிக்கையாளர் கொலைச் சம்பவங்களில் இதுவரை துப்பு துலங்கவில்லை என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
உலக அளவில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் நிகழ்வுகளில் 70 சதவீதம் பணியில் ஈடுபட்டிருக்கும்போது நடந்த கொலைகள் என்றும் அத்தகவல் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications