உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட இளைஞர் காங். விருப்பம்
சென்னை: தமிழகத்தில் தடமே தெரியாமல் காங்கிரஸுக்கு மக்கள் சூடு கொடுத்துள்ள நிலையில் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் பிரச்சினை, உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகள், குடும்ப அரசியல் இவைதான் காரணம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவேண்டும். இதை கட்சி மேலிடத்தில் தெரிவிப்போம்.
தமிழக அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யாமல் இந்த ஆண்டு அமல்படுத்தவேண்டும்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், கச்சத் தீவை திரும்ப பெறவும் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததை வரவேற்கிறோம்.
இயக்குநர் சீமான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதுபோல் போலியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் பெண்ணை ஏமாற்றி ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் போன்ற மதவாத அமைப்புகள் நாட்டில் மதமோதல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இவர்களுக்கு பாபா ராம்தேவ் உடந்தையாக செயல்பட்டு வருகிறார். ஆயுதப்பயிற்சி அளிப்போம் என்று கூறிய அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
பாபா ராம்தேவை கண்டித்து சென்னையில் 15-ந்தேதி உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இதில் டெல்லியில் இருந்து தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு அறிவித்து உள்ளது.
ஊழலுக்கு எதிராக நடுநிலையோடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர முதல்வரை ஊழல் காரணமாக பதவியில் இருந்து நீக்கினோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, காமன்வெல்த் முறைகேடு வழக்கு ஆகியவற்றிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications