ஜெயலலிதா ஒருபோதும் நீதிமன்றத்தை மதித்ததில்லை-ப.சிதம்பரம்

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, சிவகங்கையில் முறைகேடு செய்து தான் ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். அங்கு உண்மையிலேயே வெற்றி பெற்றது அதிமுக வேட்பாளர்தான். ஆகவே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரம் விலக வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதையுமே தவறாக ஆரம்பிப்பது ஜெயலலிதாவின் வழக்கம் தான். இன்று எனது தேர்தல் வெற்றி குறித்து அவர் பேசியது குறித்து அறிந்தேன்.
எனது தேர்தல் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தாக்கல் செய்துள்ள வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
வழக்கு விசாரணையில் இருக்கும்போது ஜெயலலிதா அது குறித்துக் கருத்து கூறியுள்ளது தவறு. அது நீதிமன்ற அவமதிப்பாகும். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவர் ஒருபோதும் நீதிமன்றத்தை மதிப்பதில்லை. இதனால் அவரது பேச்சு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
மேலும் அதே ராஜ கண்ணப்பன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஒரு சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இந்தத் தேர்தல் முடிவும் மோசடியானது என்று கூட ஜெயலலிதா சொல்வார் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications