நாமக்கல் அருகே கோர விபத்து-11 பேர் பரிதாப பலி
நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த கோரமான சாலை விபத்தில் 11 பேர் பலியானார்கள்.
தமிழகத்தில் சாலை விபத்துக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. தினசரி ஒரு கோர விபத்து நடைபெறுவது சகஜமாகி வருகிறது. சமீபத்தில்தான் காவேரிப்பாக்கம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்துக் கொண்டதில் அதில் பயணம் செய்த 22 பேர் பரிதாபமாக கருகிப் பலியானார்கள். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே நடந்த கோர விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி கவுன்சிலராக இருந்த விசுவநாதன் கடந்த வாரம் இறந்து விட்டார். மகன் இறந்த சோகம் தாங்காமல் அதிர்ச்சியில் இருந்த அவரது தாயார் மலையம்மாள் (55) நேற்று காலை இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருப்பூந்துருத்தியை சேர்ந்த உறவினர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் மோகனூருக்கு வேனில் வந்தனர்.
துக்கம் விசாரித்த பின்னர் நேற்று மாலை ஊருக்குக் கிளம்பினர். வேன் மோகனூர் அருகே வந்தபோது திடீரென எதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது. அந்த லாரி, கரும்பு சக்கை ஏற்றிக் கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலைக்குச் சென்று கொண்டிருந்ததாகும். லாரியுடன் மோதிய வேகத்தில் வேன் சாலையில் 2 முறை உருண்டு விழுந்து கவிழ்ந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேகமாக ஓடி வந்து வேனுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில் நால்வர் பெண்கள், இருவர் ஆண்கள். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கொண்டு செல்லப்படும் வழியில் மேலு் நான்கு பேர் உயிரிழ்தனர். மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட இன்னொருவரும் உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கிய லாரியின் டிரைவரும் இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டார். அவரை பெரும் சிரமத்துடன் மீட்டனர். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications