சமச்சீர் கல்வியே மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்மை பயக்கும்-கருணாநிதி
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். அதுதான் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அரசு செய்யும் நன்மையாக அமையும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சியில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்வி புத்தகங்கள், ஆறரை கோடிக்கு மேல் விநியோகிக்கப்பட்ட நிலையில் அது செல்லாது என்று கூறிவிட்டு, ஜூன் 15ஆம் தேதிக்குள் புதிய பாட திட்டப்படி புத்தகங்களை அச்சடிக்கும் பணிகள் அரசால் நடைபெற்றன.
இந்த விவகாரத்தில் பழைய விலையைவிட இரண்டு மடங்கு விலை கொடுத்து புத்தகங்களை அச்சடிக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக சிங்கிள் கலரில் ஏ4 அளவில் எட்டுப் பக்கங்கள் அச்சடிக்க 34 ரூபாய் முன்பு வழங்கப்பட்டது. இப்போது 70 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பைண்டிங் செலவு 24 ரூபாயிலிருந்து இப்போது 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கலர் பாடப் புத்தகங்கள் ஏ4 அளவில் 85 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
திமுக அரசின் முடிவிற்கு மாறாக வீம்பின் காரணமாகச் செயல்பட நினைப்பதால் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ள முதலாவது வீண் செலவு என்று இதனை எடுத்துக் கொள்ளலாம்.
சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக அரசின் திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடையாணை கொடுத்த பிறகும், அதனைக் கேட்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது, அதிமுக அரசுக்கு தமிழக மாணவர்கள நலனில் அக்கறை இல்லை என்பதைத்தான் இது காண்பிக்கிறது.
இப்போது உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்றும்,மற்ற வகுப்புகளைப் பொருத்தவரை ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை கொடுத்து, அதன் மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறிவிட்டது.
பள்ளிகள் புதன்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்ற முடிவு தெரிகின்ற வரையில் மாணவர்கள் எந்தப் புத்தகங்களைப் படிப்பார்கள் என்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது.
இந்தப் பிரச்னையில் திமுக சொல்வதை ஏற்காவிட்டாலும், சமச்சீர் கல்வியை நிறுத்தாமல் இந்த ஆண்டே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சொல்வதையாவது அரசு ஏற்க முன்வர வேண்டும்.
பிரதமரைச் சந்திக்க எந்தவொரு மாநில முதல்வர் டெல்லிக்குச் சென்றாலும், பிரதமர் அலுவலகத்திலிருந்துதான் கார் வந்து அழைத்துச் செல்லும். அது பாதுகாப்பு கருதி செய்யப்படுகின்ற ஒன்று.
பல ஆண்டுகளாக நடைமுறையிலே இருந்து வருகின்ற ஒன்றாகும். அதைப் பெரிதுபடுத்தி, பிரதமரே காரை அனுப்பி முதல்வர் ஜெயலலிதாவை அழைத்துச் சென்றதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications