சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் திடீர் மாற்றம்

தமிழகத்தில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த அர்ச்சனா ராமசுந்தரம், போலீஸ் பயிற்சிப் பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
அவரது இடத்தில் கூடுதல் டிஜிபி சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி அருகே அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் பலியான விவகாரத்தில் படு தீவிரமாக துப்பு துலக்கியது சிபிசிஐடி. அர்ச்சனா ராமசுந்தரம் பெரம்பலூரிலும், திருச்சியிலும் முகாமிட்டு இந்த வழக்கை முடுக்கி விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் துணை ஆணையராக அசோக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பில் ஏற்கனவே இருந்து வந்த திருநாவுக்கரசு அதிமுகவினரைக் கைது செய்த சர்ச்சையில் சிக்கியதால் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் போலீஸ் கமிஷனராக சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐஜியாக சுனில் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை துணை ஆணையராக ஜெயபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் முக்கியப் பதவியில் சேகர்
சிபிசிஐடி கூடுதல்டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.சேகர் 2008ம் ஆண்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பதவி வகித்து வந்தார். அப்போது சட்டக் கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வன்முறையை காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்ததால் அவரது பதவி பறி போனது. இந்த நிலையில் மீண்டும் சேகர் சென்னையில் முக்கியப் பதவிக்கு வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications