சமச்சீர் கல்விக்கான நிபுணர் குழு நியமனம்-திருமதி ஒய்ஜி பார்த்தசாரதி உறுப்பினரானார்!

நடப்புக் கல்வியாண்டில் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்தலாம். பிற வகுப்புகளுக்கு இதை அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு இன்று அறிவிக்கப்பட்டது.
குழு விவரம்:
1. குழுத் தலைவர் - தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி
2. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா
3. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வசுந்தரா தேவி
4 மத்திய இடைநிலைக்கல்வி வாரிய முன்னாள் இயக்குநர் ஜி.பாபசுப்ரமணியன்
5. சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிக் பள்ளி முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி
6. கோபாலபுரம் டிஏவி பள்ளி நிறுவனர் ஜெயதேவ்
7. பத்மா சேஷாத்ரி பள்ளி இயக்குநர் திருமதி ஒய்ஜி பாராத்திசராதி
8. தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன பேராசிரியர் பி.கே. திரிபாதி
9. பேராசிரியர் அனில் சேத்தி
இந்தக் குழுவினர் 2 வாரங்களுக்குள் தங்களது ஆய்வறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஒரு வாரத்திற்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை 1, 6 ஆகிய வகுப்புகளைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகம் வைத்து பாடம் நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
நோட்டீஸ் போர்டில் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்:
இந் நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கோட்டையில் நிருபர்களிடம் கூறுகையில், 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் விநியோகிக்க நேற்றே உத்தரவிடப்பட்டுவி்ட்டது.
சமச்சீர் கல்வி நிபுணர் குழு அமைக்கப்பட்டு விட்டதால் ஆய்வுப் பணி உடனடியாகத் தொடங்கும். குறிப்பிட்ட தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும்.
தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பெற்றோர்களிடம் இருந்து புகார் வந்தால் மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்கும். இதுவரை குறிப்பிட்டு எந்த பள்ளி மீதும் புகார் வரவில்லை. கட்டணப் பிரச்சனையில் அரசு தலையீடு எதுவும் இருக்காது.
இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பள்ளிக்கூடங்கள் வசூலித்தால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications