நோக்கியா உதிரிபாக குடோனில் பெரும் தீ: மூவர் படுகாயம்!

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நோக்கியா செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவன வளாகத்தில் பெர்லாக்ஸ் என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் உள்ளது. இதன் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு குடோன் முழுவதும் பரவியது.
இதில் குடோனில் இருந்த சுமார் 37 ஆயிரம் லிட்டர் பெயிண்ட், தின்னர், அட்டைபெட்டிகள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் உள்பட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகின.
3 பேர் படுகாயம்
இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம், திருப்பெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை, பேரம்பாக்கம், மறைமலைநகர் போன்ற பகுதிகளிலிருந்து தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இந்த தீவிபத்தில் மணி (வயது 28) என்பவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்துக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications